”உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன்” - நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியான ‘வீர தீர சூரன் - பாகம் 2’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 8 நாட்களாகியிருக்கும் நிலையில், இதுவரை ரூ.52 கோடியை கடந்திருக்கும் படத்தின் வசூல், எதிர் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட நடிகர் விக்ரம், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன், என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் விக்ரம் கூறுகையில், “எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்க முடியாதது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.