Feb 16, 2023 06:48 AM

’குண்டான் சட்டி’ படம் மூலம் இயக்குநரான 12 வயது மாணவி!

’குண்டான் சட்டி’ படம் மூலம் இயக்குநரான  12 வயது  மாணவி!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுடன் வரும் புதியவர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் பெரும் வரவேற்பு கிடைப்பது நிச்சயம். அந்த வகையில், 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி பி.கே.அகஸ்தி, ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

கொரோனா காலக்கட்டத்தில் புத்தகங்கள் படித்ததன் மூலம் சமூக சிந்தனையோடு கதை எழுதிய பி.கே.அகஸ்தி, முதலில் அந்த கதையை புத்தகமாக வெளியிட நினைத்திருக்கிறார். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் வாசிப்பதை காட்டிலும்,  வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அந்த கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.

 

மாணவி அகஸ்தியின் இந்த முயற்சிக்கு சம்மதம் தெரிவித்த அவரது தந்தை கார்த்திகேயன், அதற்கான பணிகளில் ஈடுபட்டதோடு, தனது மகள் திரைப்பட இயக்குநராவதற்கான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். அதன்படி, தனது கதையை அனிமேஷன் திரைப்படமாக பி.கே.அகஸ்தி இயக்கியுள்ளார்.

 

பி.கே.அகஸ்தி இயக்கியிருக்கும் ‘குண்டான் சட்டி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, அரவிந்த்ராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் என ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்கள்.

 

Kundan Satti

 

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.  இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன.  குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான்.  இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள்.  

 

குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாக படிக்கிறார்கள். அவர்களது கிராமத்தில் கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக ஏமாற்றுகிறார்கள். இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். இருவரும் வாழைத்தோப்புக்காரர், சலவை தொழிலாளி, குதிரைக்காரன், பேராசை கிராமம் என அவர்களிடமும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டி பணம் சேர்க்கிறார்கள்.  

 

குண்டானும், சட்டியும் மீண்டும் ஊருக்குள் வர... இவர்களால் பாதிக்கப்பட்ட பண்ணையார், சேட்டு, வியாபாரி மூவரும் இவர்கள் இருவரும் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து அடியாட்களை அனுப்பி தூக்கி வரச் சொல்ல, அடியாட்கள் அவர்களை அழைத்து செல்வதைப் பார்த்த அணில் மற்றும் வாத்தியார் பெற்றோருக்கு தெரியப்படுத்த குண்டானும், சட்டியும் காப்பாற்றப்பட்டார்களா ? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா? என்பதே ’குண்டான் சட்டி’ படத்தின் கதை.

 

அதே கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சிறு சிறு விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறார் பி.கே.அகஸ்தி . 

 

7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி இந்த சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கியிருப்பது அனைவரின் புருவத்தை உயர்த்திருக்கிறது.  

 

இப்படத்திற்கு எம்.எஸ்.அமர்கித் இசையமைக்க, பி.எஸ்.வாசு படத்தொகுப்பு செய்துள்ளார். திரைக்கதை, வசனம், பாடல்களை அரங்கன் சின்னத்தம்பி எழுதியுள்ளார். கதை எழுதி பி.கே.அகஸ்தி இயக்கியுள்ளார். டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

 

8 மாத கடின உழைப்பில் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து பி.கே.அகஸ்தி உருவாக்கியுள்ள ‘குண்டான் சட்டி’ படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி இரண்டு வாரங்களாக நடைபெற்றுள்ளது. தற்போது பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாதத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.