Nov 12, 2022 05:23 PM

வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது - நடிகர் அசோக் செல்வன் ஓபன் டாக்!

வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது - நடிகர் அசோக் செல்வன் ஓபன் டாக்!

வித்தியாசமான கதாபாத்திரங்கள், மாறுபட்ட கதைக்களங்கள் என்று ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு நடிகராக மட்டும் இன்றி எந்த வேடம் கொடுத்தாலும், அதில் கச்சிதமாக பொருந்தி பாராட்டும்படி நடிக்க கூடிய நடிகர்களிலும் ஒருவராக உருவெடுத்துள்ள அசோக் செல்வனின், படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

‘ஓ மை கடவுளே’, ‘மன்மத லீலை’ என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த அசோக் செல்வன், ‘நித்தம் ஒரு வானம்’ படம் மூலம் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.

 

விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து ஊடகங்களிடம் பாராட்டு பெற்றுள்ள அசோக் செல்வன், சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

 

அப்போது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அசோக் செல்வன், “எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது” என்று வெளிப்படையாக பேசினார்.

 

தொடர்ந்து பேசியவர், “நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள். அதை சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும் தான் என்னை செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள் தான்.  உங்கள் கருத்துக்களின்படி தான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும், அதுவே என் விருப்பம்.

 

ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். ’நித்தம் ஒரு வானம்’ படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.

 

கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம்.

 

அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.