நடிகர் விஜயின் கடைசிப் படம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

நேரடி அரசியலில் ஈடுபட உள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்குப் போடப்போவதாக அறிவித்ததுடன், அவரது 69 வது படம் தான் கடைசி படமாகவும் இருக்கும், என்று அறிவித்ததால், அப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் தரப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கே.வி.என் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் விஜயின் 69 வது படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா அவர்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில், 'தளபதி-69'-ஐ தயாரிப்பதன் மூலம் தலைசிறந்த படைப்பை வழங்க உறுதிபூண்டுள்ளனர். இத்திரைப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோகித் என்.கே இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
எச்.வினோத் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
குறிப்பிடத்தக்க தனது முந்தைய படைப்புகளின் மூலம் பாராட்டப்பட்ட திறமையான இயக்குனரான எச். வினோத் அவர்கள் இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு உயிரளிக்கிறார். 'தளபதி'விஜய் மற்றும் எச்.வினோத் முதன்முறையாக கூட்டணி சேர்வதன் மூலம் ஒரு புதுமையான மற்றும் அற்புதமான சினிமா அனுபவத்தை அளிக்கும் திரைப்படமாக அமையும் என்பது உறுதியாகிறது.
இதற்கு முன்பு 'தளபதி'விஜய் நடித்த திரைப்படங்களான கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ போன்ற படங்களுக்கு இசையமைத்து, வெற்றிப் பாடல்களைத் தந்த 'அனிருத் ரவிச்சந்தர்' இத்திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம்
'தளபதி' விஜய் அவர்களுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கே வி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் 'தளபதி' விஜய் அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகளையும் இப்படப்பிடிப்பின் போது உருவாகும் புதிய நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள பிரத்யேக வியூகத்தை வகுத்துள்ளது.