Jul 05, 2024 05:58 AM

’ஒரு நொடி’ வெற்றியை தொடர்ந்து தமன்குமார் நடிக்கும் ‘பார்க்’!

’ஒரு நொடி’ வெற்றியை தொடர்ந்து தமன்குமார் நடிக்கும் ‘பார்க்’!

2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஒரு நொடி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்திருக்கும் நடிகர் தமன்குமார் நடிப்பில் தற்போது உருவாகும் படத்திற்கு ‘பார்க்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

அக்‌ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் லயன் இ.நடராஜ் தயாரிக்கும் இப்படத்தை இ.கே.முருகன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இதில் தமனுக்கு ஜோடியாக ‘லாந்தர்’ பட நாயகி ஸ்வேதா டோரதி நடிக்கிறார். வில்லனாக யோகிராம் நடிக்க, கதாநாயகியின் தந்தையாக தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜன் நடிக்கிறார். இவர்களுடன் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு பூங்காவில் (PARK) நடைபெறும் திகில் சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, படப்பிடிப்பும் திருவண்ணாமலை அம்ற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடத்தப்பட்டது.

 

படம் பற்றி இயக்குநர் ஈ.கே.முருகன் கூறுகையில், “இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது. அவருக்கு சினிமா மீது காதல் உண்டு. எனவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்தார். சரியாகத் திட்டமிட்டு 36 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

 

எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் பேயை ஓட்டுவதற்கு ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்த சாமியார்கள் வருவது போல் தான் காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் எந்த மதத்தைச் சார்ந்தவரும் பேய் ஓட்ட வரவில்லை .வேறொரு முறையில் அந்தப் பேயை ஓட்டுவதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது வேறு எந்தப் படத்திலும் யாரும் சிந்திக்காதது என்று நான் சொல்வேன்.

 

அண்மையில் வெற்றி பெற்ற ஒரு நொடி படத்தில் நடித்துள்ள தமன்குமார் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் .அதேபோல் சமீபத்தில் வெளிவந்த லாந்தர் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்துள்ளார்.அதேபோல் அண்மை வெற்றிப் படமான  கருடன் படத்தில் வில்லனாக நடித்த யோகிராம் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் பாடகி சுசித்ரா பாடிய பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.இப்படி அண்மைக் காலங்களில் பல வெற்றிப் படங்களில் இடம் பெற்றவர்கள் ,ரசிகர்கள் மத்தியில் முகமறிந்தவர்களாகப் பரிச்சயப்பட்டவர்களை  நடிக்க வைத்திருக்கிறோம்.

 

ஹாரர் படங்களுக்கு என்றும் வரவேற்பு இருக்கும். முதலீடு செய்யும் தயாரிப்பாளரையும் காப்பாற்றி விடும்.எனவே இந்த வகைப் படத்தை எடுக்கத் தீர்மானித்து முடித்தோம். இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஆகஸ்டில் இப்படத்தை வெளியிடுவதாகத் திட்டமிட்டு இருக்கிறோம்.” என்றார்.

 

பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹமரா சி.வி இசையமைக்கிறார். குரு சூர்யா படத்தொகுப்பு செய்ய, ராபர்ட் மற்றும் சுரேஷ் சித் நடனக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஆர்.வெங்கடேஷ் கலை இயக்குநராக பணியாற்ற, நா.ராசா பாடல்கள் எழுதியுள்ளார். எஸ்.ஆர்.ஹரிமுருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தயாரிப்பு நிர்வாகியாக கே.எஸ்.சங்கர் பணியாற்றுகிறார்.

 

இறுதிக்கட்டப் பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘பார்க்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.