அசோக் செல்வனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். அசோக் செல்வனின் 23 வது படமாக உருவாகும் இப்படத்தின் கதையை 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார்.
இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது. முழு நீள பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் ( Happy High Pictures) சார்பில் அஷோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
'ஓ மை கடவுளே' எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், 'போர் தொழில்' பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும், இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.