Dec 13, 2022 06:55 AM

இளைஞர்களின் நடன நிகழ்ச்சியோடு நடந்த ‘காலேஜ் ரோட்’ டிரைலர் வெளியீட்டு விழா

இளைஞர்களின் நடன நிகழ்ச்சியோடு நடந்த ‘காலேஜ் ரோட்’ டிரைலர் வெளியீட்டு விழா

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன் மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘காலேஜ் ரோடு’. MP எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரவீன், சரத், மற்றும் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார்.

 

லிங்கேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மோனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிற படமாக உருவாகியுள்ள இப்படம் பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை என கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் உருவாகியுள்ளது.

 

வரும் டிசம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 

இந்த நிலையில், ‘காலேஜ் ரோட்’ படத்தின் டிரைலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளோடு கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு படம் பற்றி பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

College Road

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் லிங்கேஷ், “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம்.  மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக்கல்வியை கொடுத்து வருகிறது. ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. 

 

கல்வி கற்க கல்விக்கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். உயர் படிப்புகளை திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் போனவர்கள் பலர்.

 

அதிலும் கல்விக்கடன்  வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலமை பெரும் துயரமானது. கல்விகடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள் ஏராளம்.

 

கல்விக்கடன் குறித்து இந்த படம் விரிவாக பேசுகிறது. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசியிருக்கிறோம். சஸ்பன்ஸ் நிறைந்த கலகலப்பான படமாக இருக்கும். கமர்சியல் கலந்த சமூகபொருப்புள்ள கதையை சொல்ல வருகிறோம்.” என்றார்.

 

ஆப்ரோ இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் படத்தொகுப்பு செய்துள்ளார்.