Sep 13, 2022 04:52 PM

‘பரோல்’ பட டிரைலருக்கு கிடைத்த அமோக வரவேற்பு! - மகிழ்ச்சியில் படக்குழு

‘பரோல்’ பட டிரைலருக்கு கிடைத்த அமோக வரவேற்பு! - மகிழ்ச்சியில் படக்குழு

துவாரக் ராஜா இயக்கத்தில், TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரோல்’. குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். டிரைலரை வெளியிட்டது மட்டும் இன்றி, டிரைலரின் கதைக்கு அவர் குரலும் கொடுத்துள்ளார். 

 

டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு, ‘பரோல்’ ஒரு அழுத்தமான தரமான படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்திருப்பதோடு, படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறுகையில், “’பரோல்’ படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் எங்கள் குழுவினரின் பெரும் கனவு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும் ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்ல முடியாத ஒரு கதை தான் இது.  தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும் அவன் அண்ணனுக்குள் உள்ள பிரச்சனையும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம். 

 

Parole

 

இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை ஆனால் வலுவான ஆக்சனும் பரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும். இப்படத்திற்கு குரல் தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. டிரெய்லரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார்.  படம் முடித்தவுடனே அவரிடம் காட்டினேன், படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் குரல் தந்தால் நன்றாக இருக்கும் என்றேன், உடனடியாக ஒப்புக்கொண்டு அவரின் கடின வேலைகளுக்கிடையில் செய்து தந்தார் அவருக்கு பெரிய நன்றிகள். இப்படத்தின் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் மிகப்பெரிய தூணாக இருந்து உழைத்துள்ளார்கள், அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திப்படுத்தும் புதுமையான படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும்.” என்றார்.

 

ராஜ்குமார் அமல் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். முனீஸ் படத்தொகுப்பு செய்ய, அருண்குமார்.ஏ கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.