Nov 07, 2022 05:39 PM

”நட்டி நடிப்பதால் ‘குருமூர்த்தி’ வித்தியாசமான படமாக இருக்கும்” - ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை

”நட்டி நடிப்பதால் ‘குருமூர்த்தி’ வித்தியாசமான படமாக இருக்கும்” - ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை

நட்டி நடராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘குருமூர்த்தி’. இதில் ராம்கி மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியான பூனம் பர்வா நடிக்க, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

ஒளிப்பதிவாளரான கே.பி.தனசேகரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’புஷ்பா’ படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். எஸ்.என்.பாசில் படத்தொகுப்பு செய்கிறார்.

 

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சத்யதேவ் பேசுகையில், “இந்த படம் எனக்கு ஒரு மறுபிறவி என்று சொல்லலாம். இந்தப் படத்திற்காக தான் நான் நீண்ட நாட்கள் காத்திருக்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசுகையில், “ராஜாவாக இருந்தாலும் கூட அவருக்கும் சின்னச்சின்ன ஆசை இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப் போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்த வகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும்.

 

சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை. வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த 250 கோடி ரூபாய் வாராக்கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் 10 லட்சம் கோடி வாராக்கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது? இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நலநிதி கூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டு, ஆனால் அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும், அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்றார்.

 

Gurumoorthy

 

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பேசுகையில், “இயக்குநர் தனசேகரன் என்னுடன் சென்னை-28, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவுக் துறையில் இணைந்து பணியாற்றினார். ஆனாலும் அவருக்குள் இயக்குநராகும் கனவு இருந்துகொண்டே இருந்தது. பொதுவாகவே ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் டைரக்சன் ஆசை உள்மனதில் இருக்கும். ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்டி நட்ராஜ் கூட அவருக்குள் இருக்கும் நடிகராகும் ஆசையால் தான் மிகப்பெரிய வாய்ப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு இங்கே நடிகராக வந்து சாதித்துள்ளார்” என்று கூறினார்.

 

இயக்குநர் கே.பி.தனசேகரன் பேசுகையில், “இயக்குநராக இது எனக்கு முதல் படம். புது இயக்குநர் தானே என நினைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தை பெரிய படமாகக் கொண்டு வருவதற்கு எனக்கு ஊக்கமளித்தார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேவராஜ், புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சத்யதேவ் நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்” என்றார்.

 

நடிகர் நட்டி பேசுகையில், “ஒரே நாளில் நடக்கும் கதை தானே சிட்டிக்குள்ளேயே இந்த படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல் கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்க தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது. படப்பிடிப்பில் யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம். இந்த படத்தின் கதையை இயக்குநர் தனசேகரன் என்னிடம் கூறியபோது ஒரே நாளில் இவ்வளவு விஷயங்களா..? உங்களால் இதை எல்லாவற்றையும் காட்டி விட முடியுமா என்று கேட்டேன். சொன்னபடியே அழகாக அத்தனையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார். 'செக்கச்சிவந்த சுந்தரி' பாடலில் ராம்கி மூன்று நடிகைகளுடன் நடனமாடியுள்ளார். அந்தப்பாடலில் எனக்கு இடம் இருக்கிறதா என்று கேட்டபோது உங்களுக்கு இதில் வேலை என்று இல்லை என ஒதுக்கி விட்டனர்” என்று ஜாலியாகப் பேசினார்.

 

நடிகை பூனம் பஜ்வா பேசுகையில், “இந்த படத்தின் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் நட்டியுடன் இணைந்து நடித்தது போன்று எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களில் அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அளவுக்கு பழகுவதற்கும், இணைந்து நடிப்பதற்கு நல்ல மனிதர்” என்றார்.

 

நடிகர் ராம்கி பேசுகையில், “கோவிட் நிலவிய காலகட்டத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். படக்குழுவினரின் பாதுகாப்புக்காக, தினசரி பூஜை நடத்தும் அளவிற்கு நல்ல மனிதர். 25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். எல்லா இடங்களிலும் அவர் பெயரே கேட்கும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார். படத்தில் எங்கேயும் அவரது தலையீடு இல்லை. ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கி உள்ளார்” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “ராம்கி ஹீரோவாக நடித்து வந்த சமயத்தில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது 3 கதாநாயகிகளுடன் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மாஸ் ஹீரோக்கள் விரும்பும் கேமராமேனாக இருக்கிறார் நட்டி. இயக்குநர்களுக்கு இப்போது பெரிய மரியாதை இல்லை.. ஆனால் நடிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என்பதால் பலபேர் நடிப்பு பக்கம் கிளம்பி விட்டார்கள்.. காரணம் நடிகர்கள் கையில்தான் சினிமா இருக்கிறது.  தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து சிரமம் தரக்கூடிய, தயாரிப்பாளர்கள் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

 

இறுதியாக வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே ராஜன் பேசுகையில், “நட்டி எப்போதுமே ஒரு ஹேண்ட்சம் ஹீரோ. இந்தியில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக இருப்பவர். அவருடன் 'பகாசுரன்' என்கிற ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எனக்கு செல்வராகவனின் அப்பா வேடம். அந்தப் படத்தில் நடிக்கும்போது கறுப்பாக இருந்தார்.. இப்போது என்ன வெள்ளையாக இருக்கிறாரே என்று பார்த்தால், அந்த பாடலில் நாயகியுடன் உரசி உரசி நடனமாடி கலராக மாறி விட்டார் போல.. நான் சர்ச்சையாகப் பேசுபவன் என்று கூறுகிறார்கள்.. நான் இந்த சினிமா தொழில் பாதிப்புக்கு காரணமானவர்களை நிச்சயம் விமர்சிப்பேன்.. பட விழாக்களுக்கு நடிகர்கள் வரவேண்டும் என சொல்வது எங்களுக்காக அல்ல.. வந்தால் உங்களுக்குத் தான் லாபம்.. தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டாலும் கூட அது நடிகர்களுக்குத் தான் லாபம்.

 

படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குநர் தான் காரணம். ஆனால் படம் வெற்றி பெறும்போது ஹீரோ சம்பளத்தை ஏற்றுகிறார். தோல்வி அடையும் போது அவர் சம்பளத்தைக் குறைப்பதில்லை, ஆனால் இயக்குநர் தான் பாதிக்கப்படுகிறார். அதுமட்டுமல்ல படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரோடு அந்த படத்தின் விநியோகஸ்தர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். 'பொன்னியின் செல்வன் ' மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்துள்ள இயக்குநர் மணிரத்னம் கூட ஆந்திராவில் தான் அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினார். இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தினால் தான் இங்குள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும், இங்கு இருப்பவர்கள் ஆந்திராவில் சென்று தீபம் ஏற்ற வேண்டுமா?

 

அதேபோல பெரிய நடிகர்கள் நடித்தால் தான் திரையரங்குகளுக்குக் கூட்டம் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. சிறிய படமாக பெரிய அளவில் பிரபலம் இல்லாத இயக்குநர் அவரே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள ‘லவ்டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப  படம் இருப்பதை தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் மூலம் காணமுடிகிறது. நல்ல படங்களைக் கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு நிச்சயம் வருவார்கள், அதற்கு பெரிய நடிகர்கள் தான் வேண்டும் என்கிற அவசியமில்லை.” என்றார்.