Nov 15, 2022 05:22 AM

ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய ‘ஓ பெண்ணே’ தனியிசை பாடல்!

ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய ‘ஓ பெண்ணே’ தனியிசை பாடல்!

தனியிசை பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், திரைப்பட பாடல்களையும் தானி தனியிசை வீடியோ பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இத்தகைய பாடல்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பால் பிரபல இசையமைப்பாளர்களும் தனியிசை பாடல்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், ’எழுமின்’, ‘வேட்டை நாய்’ படங்களின் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் வரிகள் எழுதி இசையமைத்திருக்கும் “ஓ பெண்ணே...” என்ற தனியிசை பாடல் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவர் இதற்கு முன்னதாக தனுஷ், யோகி பி, அனிருத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். மேலும் இசைத்துறை சார்ந்த திரையுலக முன்னணி இசைக்கலைஞர்களுடன் நட்புடன் இருப்பவர்.

 

கணேஷ் சந்திரசேகரன் இந்த ஆல்பத்திற்கான பாடலை எழுதியவுடன் வித்தியாசமான தென்றல் போல் வருடும் ஒரு இதமான குரல் வேண்டும் என்று நினைத்தபோது முதலில் அவர் மனதில்  வந்து நின்றவர் ஜி. வி. பிரகாஷ் குமார் குரல்தான். ஆனால் திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவரிடம் கேட்டால் அவர் எப்படி இதை எடுத்துக் கொள்வாரோ என ஒரு வினாடி தயக்கம் இருந்தது. பிறகு தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்த போது அவர் உடனே சம்மதித்துள்ளார்.மறுநாளே பாடலாம் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியிருக்கிறார்.திடீர் சம்மதத்தில் உறைந்து போன கணேஷ் ,ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார்.அப்படி ஒரு வாரத்தில் ஒலிப்பதிவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

 

இது பற்றி கணேஷ் சந்திரசேகரன் கூறுகையில், “ஜி.வி பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றவர்.இசைத் துறையில் பெரிய உயரங்களைத் தொட்டவர். மேலும் உயர்ந்து கொண்டிருப்பவர்.அவர் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் அவரிடம் இப்படி ஒரு யோசனையைக் கூறிப் பாடிக் கேட்ட போது  அவரும் உடனே சம்மதித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

 

Oh Penne

 

நான் சொன்னதைப் புரிந்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நான் நினைத்த மாதிரி பாடி அனுப்பியது மேலும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா காலக்கட்ட இடைவெளிகள் எங்கிருந்தாலும் அனைவரையும் இணைக்கிறது என்பதை நினைத்து வியப்பாக இருந்தது.பாடலை எழுதிய நான் அவர் பாடிய பின், அவர் குரலில் கேட்டபோது, வரிகள் எழுதிய எனக்கே அந்தக் குரல் மூலம் இன்னொரு பரிமாணம் கிடைத்ததாக உணர்ந்தேன். அவரது அந்தக் குரல் இதயத்தின் ஆழத்தில் வருடும்படி இருந்தது. இது மனவலியை வெளிப்படுத்தும்படியான ஒரு சோகமான உணர்ச்சிகரமான பாடல். அவரது குரல் மூலம் அந்தப் பாடலுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டது.” என்றவர், ”இதுவரை இசையமைத்துள்ளவற்றில் இது ஒரு புதிய பரிமாணமாக, தனக்கு அமைந்துள்ளது என்று பெருமையுடன் தெரிவித்தார்.

 

இந்தக் காலகட்டத்தில் இசை பணிக்காக ஜெர்மன் சென்றிருந்த கணேஷ் பாடலை இணையத்தில் மூலம் அனுப்பி இருக்கிறார்.ஜி. வி. பிரகாஷ் குமார் உடனே பாடி அனுப்பி இருக்கிறார். திருத்தங்கள் வேண்டிய போது நேரில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கணேஷ் யோசித்துள்ளார். ஆனால் இந்த கொரோனா கால சமூக இடைவெளி இப்படி இணையத்தின் மூலம் பலரையும் இணைத்துள்ளதால் இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு திருத்தங்களைக் கூறிய போது அதையும் சரி செய்து ஜி.வி பிரகாஷ் குமார் அனுப்பியிருக்கிறார்.

 

சினிமா ராசா மற்றும் கேன்னி ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ள ”ஓ பெண்ணே...” தனியிசை வீடியோ பாடலை ”ஒத்த தாமரை” பாடலை இயக்கிய டி.ஆர்.பாலா இப்பாடலை இயக்கியுள்ளார். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்ரீதனர் நடனம் அமைத்துள்ளார்.