Oct 28, 2022 07:14 PM

நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும் - ‘செம்பி’ இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும் - ‘செம்பி’ இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா மற்றும் அஷ்வின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘செம்பி’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் அஜ்மல் கான், ரெயா ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தின் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

 

இந்த நிலையில், ’செம்பி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா இன்று நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை சத்யம் திரையங்கில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “கோவைசரளாவை அக்கா, அம்மா என்று கூப்பிடுகிறார்கள், நான் என்ன சொல்வது என தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாக தெரியும். இதில் நன்றாக நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவும் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு இது வராது. கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை சிரிப்பு எதுவும் வராது. என்னையே திட்டியிருக்கிறார்கள். நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள். என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என சொன்னார்கள். ஆனால் இப்போது அதை கொண்டாடுகிறார்கள், அதைக்கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள், அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் எனக்கேட்டால் அது பெரிய படம் இல்லை. கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார். நான் படம் பார்த்து விட்டேன். தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம். ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும் படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்து பார்த்தேன். நாஞ்சில் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். நல்ல படம் வெற்றிப்படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். செம்பி மிகப்பெரிய வெற்றி பெறும், வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகை கோவை சரளா பேசுகையில், “இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள்.” என்றார்.

 

Sembi Audio Launch

 

நடிகார் அஷ்வின் பேசுகையில், “படம் பண்ணுவதே எனக்கு பாக்கியம். ரவி சார் எனக்கு முதல் படம் கொடுத்ததோடு இரண்டாவது படமும் கொடுத்தார். பிரபு சாலமன் சார் படம் என்றவுடனே நான் எதுவுமே கேட்கவில்லை. நான் ஓகேவா சார் எனக்கேட்டேன், அவர் எனக்கு செய்ததை திரையில் நீங்கள் பார்ப்பீர்கள். கமல் சார் பக்கத்தில் நிற்பதே பெருமை. அவர் வந்து வாழ்த்தியது மிகப்பெரிய பெருமை. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், “படத்தில் என்னுடன் தோள் கொடுத்து உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பெரும் நன்றி. உங்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. இந்தப்படத்தின் பாத்திரத்திற்காக பல காலம் அலைந்திருக்கிறேன். கொடைக்கானலில் இருந்து கொல்லிமலை வரை பலரை தேடினோம் இறுதியில் கமல் சாரின் சதிலீலாவதி ஞாபகம் வந்தது, உடனே கோவை சரளா மேடமை பார்த்து கதை சொன்னேன். என்னால் முடியுமா என்றார்கள், உங்களால் கண்டிப்பாக முடியும் என்றேன், படத்தில் அசத்திவிட்டார். இந்தப் படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்திற்கு இசையால் உயிர் கொடுத்த நிவாஸுக்கு நன்றி. ரசிகனின் ரசனையை உயர்த்துகிற கமல் சார் இங்கு வாழ்த்தியது எனக்கு பெருமை. எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் பிரபு சாலமனின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய ‘மைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கமல்ஹாசன், மைனா படத்தை பார்த்த பிறகு என் தூக்கம் தொலைந்துவிட்டது, என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.