Jul 05, 2024 05:40 AM

‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்! - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்! - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து பிரமாண்டமான தயாரித்த இப்படம் வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர்கள் காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்‌ஷன் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

திரையரங்கில் கிடைத்த வரவேற்பை ’கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மற்றும்  விமர்சகர்கள் மத்தியில், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  அதனைத் தொடர்ந்து, ஓடிடியில் வெளியான இப்படம், உலகெங்கிலும் உள்ள 14 நாடுகளில் டாப் 10 தரவரிசையில்  இடம் பிடித்தது. மேலும் இது இந்தியா உட்பட 9 நாடுகளில் டாப் 10 படங்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது.

 

இந்த நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில்,  ’கேப்டன் மில்லர்’ படம், உலகின் பல  சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள். 

 

இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில்  இணைந்து நடித்திருந்தனர்.