Dec 22, 2022 04:02 AM

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘பியூட்டி’!

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘பியூட்டி’!

ஓம் ஜெயம் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரிப்பில், கோ.ஆனந்த் சிவா இயக்கியிருக்கும் படம் ‘பியூட்டி’. இதில் ரிஷி ஹீரோவாக நடிக்க, கரீனா ஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சண்முகம் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இருந்த இயக்குநர் அதையே கதையாக எழுதி சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து, கார், பைக் சேஸிங் மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பரபரப்பான காட்சிகள் அமைத்து இப்படத்தை இயக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், இலக்கியன் இசையில், வெ.இறையன்பு I.A.S அவர்கள் எழுதியுள்ள இரண்டு பாடல்களில் “எத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?!” என்ற பாடல், காதலர்களின் காலர் ட்யூனாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில், அழகு கொட்டிக்கிடக்கும் பூந்தோட்டங்களில் இந்தப் பாடல் மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

 

“பியூட்டி” என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது... சென்னையிலும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலுள்ள பூந்தோட்டங்களில் மட்டுமல்லாமல் அங்குள்ள இரயில்வே நிலையம், விதம்விதமான கள்ளிச் செடிகள் மட்டுமே உள்ள சில இடங்கள் என படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

 

இப்படத்தை தயாரித்திருக்கும் ஆர்.தீபக் குமார் ஒளிப்பதிவும் செய்துள்ளார். அவருடைய ஒளிப்பதிவில் அழகான காதல் படமாக மட்டும் இன்றி அதிர வைக்கும் காட்சிகள் மூலம் மிரள வைக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாகவும் உருவாகியுள்ளது ‘பியூட்டி’.