Sep 13, 2024 07:38 PM

”சரவணன் மற்றும் சசிகுமாருடன் இணைந்து பணியாற்றியது பெருமை” - நடிகர் துரை சுதாகர்

”சரவணன் மற்றும் சசிகுமாருடன் இணைந்து பணியாற்றியது பெருமை” - நடிகர் துரை சுதாகர்

‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் துரை சுதாகர், ’பட்டத்து அரசன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருபவர், தற்போது இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு படம் குறித்து பேசிய நடிகர் துரை சுதாகர், “இத்திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குனர் சரவணன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் அவர்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  எத்தனையோ இயக்குநர்கள் இங்கு வசூலை முன்வைத்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அண்ணன் சரவணன் அவர்கள், சமூகம் சார்ந்து படத்தை எடுத்திருக்கிறார். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவராக அண்ணன் சரவணன் இருக்கிறார். தன் மண்ணைப் பற்றிய வேதனையை பதிவு செய்யும் விதமாக. இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.  அதேபோல் மக்களுக்காக சிந்திக்கும் சசிகுமார் அவர்கள், மிக அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள்.  வாழ்வியலைச் சொல்லும் படமாக, இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சரவணன் மற்றும் சசிகுமார் அவர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமை. அதே போல் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மகிழ்ச்சி. படத்தில் அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிக அற்புதமாக வந்திருக்கிறது, உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “துரை சுதாகர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் மண்ணின் மைந்தர்களாக மட்டும் இன்றி மிக இயல்பாக நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது, என்று பாராட்டினார்.