Sep 11, 2022 06:44 PM

படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, தரம் தான் முக்கியம்! - ஜெயம் ரவி

படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, தரம் தான் முக்கியம்! - ஜெயம் ரவி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருவதோடு, இந்தியாவின் பிரம்மாண்டமான திரைப்படமாக மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், நேற்று தனது பிறந்தநாள் மற்றும் சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்ததையும் தனது ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் கொண்டாடினார். சென்னை பிரசாத் ஸ்டியோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கிய ஜெயம் ரவி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதயவியும் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டு நடிகர் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, சினிமாவில் அவர் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “இதுபோன்று என் பிறந்தநாளை இதுவரை நான் கொண்டாடியதில்லை. ஆனால், உங்களுடைய அன்பை பார்த்தவுடன், இத்தனை வருடங்களாக இதை இழந்துவிட்டேனே என்று தோன்றுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு பிறந்தநாளன்றும் என் மனைவி என்னை எங்கேயாவது அழைத்து சென்றுவிடுவார், அதனால் தான் என்னால் இங்கே பிறந்தநாள் கொண்டாட முடியாது. ஆனால், இந்த வருடம் என் மனைவியே, ரசிகர்கள் முன்பு நீங்கள் பிறந்தநாள் கொண்டாட வேண்டும், என்று கூறி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், 25 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். இது எண்ணிக்கையில் குறைவு தான் என்றாலும், என் படங்கள் அனைத்தும் தரமான நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கும். நானே அப்படி தான் விரும்புவேன், வெறும் எண்ணிக்கை மட்டும் போதாது, படமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறேன்.

 

’ஜெயம்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகும் நான் எட்டு மாதங்கள் சும்மாவே இருந்தேன், வேறு எந்த படமும் நடிக்கவில்லை. அப்போது கூட நான் யோசித்தேன், இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு இப்படி சும்மா இருக்கோமே என்று. ஆனால், என் தந்தை தான் சொன்னார், ஏதோ வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்காக வரிசையாக படங்களில் நடிக்க கூடாது. நல்ல படங்களில் நடிக்க வேண்டும், நல்ல படங்களுக்காக காத்திருப்பது தவறில்லை, என்றார்.  என் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக தான் இருக்கும், அதற்கு இதுவும் ஒரு காரணம்.

 

நான் இந்த நிலைக்கு வர என் தந்தை மற்றும் அண்ணன் தான் காரணம். அவர்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், என் அண்ணன் தான் எனக்கு படிக்க சொல்லிக்கொடுத்தார். சினிமாவை சொல்லிக்கொடுத்தார். அவர் எனக்கு ஒரு தந்தை போல தான். என் குருவே அவர் தான். அவரை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு என் அப்பாவும், அம்மாவும் வருவதாக இருந்தார்கள். ஆனால், அப்பாவுக்கு சிறிது உடல் நிலை சரியில்லாததால் வர முடியவில்லை.

 

இந்த வரும் என் சினிமா பயணத்தில் மிக முக்கியமானது. இந்தியாவே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக பொன்னியின் செல்வன் வர உள்ளது. மேலும் பல படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களும் நிச்சயம் வித்தியாசமான படங்களாக இருக்கும்.

 

இங்கு வந்து என்னை வாழ்த்திய ஊடகத்தினர், ரசிகர்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்.” என்றார்.