Oct 26, 2022 06:34 PM

ஹாட்ரிக் வெற்றி கொடுத்த ‘சர்தார்’! - இரண்டாம் பாகத்தை அறிவித்த கார்த்தி

ஹாட்ரிக் வெற்றி கொடுத்த ‘சர்தார்’! - இரண்டாம் பாகத்தை அறிவித்த கார்த்தி

கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘விருமன்’. ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே வருடத்தில் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்த ஹீரோ என்ற பெருமை நடிகர் கார்த்திக்கு கிடைத்திருக்கிறது.

 

பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்‌ஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார். ஜார்ஜ் வில்லியம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கார்த்தி முதல் முறையாக அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக தற்போது வரை ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் உள்ளிட்ட படக்குழுவினர், இறுதியில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டார்கள்.

 

அது என்னவென்றால், ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சர்தார் 2’ என்ற தலைப்பில் எடுக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவில் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு ரசிகர்களை கார்த்தி மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும் தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார். இப்படத்தின் கதையைக் கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.

 

சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும் போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.

 

எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும், ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான்.

 

ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது என்றார். லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமாயாப நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி.” என்றார்.

 

Sardar Success Meet

 

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசுகையில், “இப்படத்தில் யாரும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியாது என்று லக்ஷ்மன் சாரிடம் கதை கூறும்போதே தெரியும். இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும் போதிருந்தே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜிவி உதவி புரிந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு எழுத்தாளர், இந்த பட கதையெய் பற்றி சொல்லுல் போது.. ஒரு மெத்தையில் இருக்கும் பஞ்சை தலையணைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று கூறினார்.

 

அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாக புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. உங்கள் பெயரை மித்ரன் என்பதற்கு பதிலாக மாத்ரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று ரூபன் கூறினார். அந்தளவிற்கு திரைக்கதையை மாற்றிக் கொண்டே இருப்பேன். படப்பிடிப்பிற்கு 60 நாள் வேண்டுமென்றால், தளம் அமைப்பதற்கு 120 நாட்கள் ஆகும். அதை கலை இயக்குநர் கதிர் சிறப்பாக செய்தார்.

 

கார்த்தி சார்.. மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம்.” என்றார்.

 

தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் குமார் பேசுகையில், “படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு சர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம். உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

 

கார்த்தி என்னுடைய நண்பர். இப்படத்தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மித்ரனுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மித்ரன் புத்திசாலியான இயக்குநர். நிறைய படிப்பார். ஒவ்வொரு முறையும் 4 மணி நேர கலந்துரையாடுவது உற்சாகமாக இருக்கும். ஜீவி அழகாக இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறார். கலை இயக்குநரை யார் அவர்? என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ரூபன் இரவு பகலாக உழைத்திருக்கிறார்.

 

ரெட் ஜெயிண்ட் உதயநிதி, ராஜா அனைவரும் மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார். மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாள வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், சண்டை உதவி இயக்குநர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.” என்றார்.