Jan 04, 2023 10:06 AM

ஒரு குடும்பத்தின் எண்ணத்தை மாற்றிய ‘கட்டில்’! - இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு நெகிழ்ச்சி

ஒரு குடும்பத்தின் எண்ணத்தை மாற்றிய ‘கட்டில்’! - இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு நெகிழ்ச்சி

மேபிள் லீப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Maple Leafs Productions) நிறுவனம் தயாரிப்பில், படத்தொகுப்பாளர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுத, இ.வி.கணேஷ் பாபு இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கட்டில்’. 

 

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.லெனின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். 

 

இப்படத்தி இடம்பெறும் “கோவிலிலே குடியிருந்தோம் நாங்கள்...” என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநரும் நாயகனுமான இ.வி.கணேஷ் பாபு, “நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான்.   2023ல்  முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது.  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா  இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி.  நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும்.   வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு   இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும்.

 

சென்னை திரைப்பட விழாவில் கட்டில் படம் திரையிடப்பட்டது, படத்தை பார்த்த ஒருவர், தங்களது குடும்ப உறுப்பினருக்காக ஒரு முறை படத்தை திரையிட வேண்டும் என்று கேட்டார். ஆனால், மான் மறுத்துவிட்டேன். திரையரங்கில் படம் வெளியாக இருக்கிறது அப்போது பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால், அவர் என்னை விடவில்லை. தயவு எனக்கு இதை செய்யுங்கள் என்று கேட்டார். சரி அவருக்காக் ஒரு முறை படத்தை திரையிட ஏற்பாடு செய்தோம். அப்போது திரையரங்கிற்கு வெளியே மிகப்பெரிய விருந்து ஒன்று நடந்துக்கொண்டிருந்தது. அதில், அவருடைய உறவினர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். எதற்காக இவ்வளவு உறவினரை அழைத்து இந்த படத்தை காட்டுகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது அவர் , ”எங்களுக்கு சென்னையில் பூர்வீக வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து விற்று விடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், உங்கள் படத்தை பார்த்த பிறகு அந்த வீட்டை விற்க கூடாது என்று நான் முடிவு செய்தேன். நமது பாரம்பரியமான அந்த வீட்டை பாதுகாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். என்னை போல் என் உறவினர்களுக்கு அந்த எண்ணம் ஏற்பட வேண்டும் என்று தான் உங்கள் படத்தை காண்பிக்கிறேன். அவர்களும் படத்தை பார்த்துவிட்டு வீட்டை விற்க வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இனி நாங்கள் அனிவரும் சேர்ந்து அந்த வீட்டை பராமரித்து பாதுகாக்க போகிறோம்.” என்றார். ஒரு குடும்பத்தின் எண்ணத்தை ‘கட்டில்’ படம் மாற்றியதே எங்களுக்கான முதல் வெற்றி. நிச்சயம் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் பேசுகையில், “நான் பிரஸ்ஸில் போட்டோகிராஃபராக தான் வாழ்வை ஆரம்பித்தேன். நான் பத்திரிக்கையாளன் என்று சொல்வதில் பெருமை. லெனின் சார் கூப்பிட்டு இந்தக்கதை சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிக உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தது. சென்னை காரைக்குடி பகுதிகளில் படமெடுத்துள்ளோம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும் நன்றி.” என்றார்.

 

நடன இயக்குநர்  மெட்டி ஒலி சாந்தி பேசுகையில், “அந்தக்காலத்தில் காதலுக்கு குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும் கதையோடு சேர்ந்து இருக்கும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். ஶ்ரீகாந்த தேவா சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். . படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த்தேவா பேசுகையில், “இந்த வாய்ப்பை தந்த, சினிமாவுக்கு காட்ஃபாதராக இருக்கும் லெனின் சாருக்கு நன்றி. மிக அற்புதமாகப் படத்தை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு நன்றி. வைட் ஆங்கிள் ரவி சார் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். என் இசையில் கிளாசிக்கல் மியூசிக் இல்லையே என வருத்தப்படுவேன் கட்டில் படம் மூலமாக அது மாறும். இந்தப்படத்தில் வைரமுத்து சார் அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், “இந்தப்படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தமிழ் பாரம்பரியத்தை இந்தப்படம் எடுத்துக்காட்டும். இந்தப்படத்தை நான் மிகவும் நம்புகிறேன். இந்தப்பாடல்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென நம்புகிறேன். இ.வி.கணேஷ்பாபு சார், லெனின் சார், ஶ்ரீகாந்த்தேவா சார், வைட் ஆங்கிள் ரவிசங்கரன் சார் இவர்கள் நால்வரும் தான் படம் சிறப்பாக வரக்காரணம். அவர்களுக்கு மிகவும் நன்றி.  படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், “மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.  வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலை சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென வாழ்த்துகிறேன். மாண்புமிகு கலைஞர் அய்யா அவர்கள் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார். தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்துவிளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திரைத்துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து செய்து தருமென உறுதி கூறுகிறேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.