Jul 01, 2024 01:18 PM

கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா இணைந்து நடிக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’!

கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா இணைந்து நடிக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’!

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் மிலிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி இணைந்து தயாரிக்கும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. அறிமுக இயக்குநர் ஷெரீஃப் எழுதி இயக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் டிவி புகழ் ரச்சிதா, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, 'புல்லட்' சமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு  சம்பவங்களை திகில் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில்  பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

 

இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது. முன்னதாக படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.

 

பூஜையில் கலந்துக்கொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படம் பற்றி பேசுகையில், “இந்த படத்தின் கதையை கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.மேலும் இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது..இயக்குனர் ஷரீஃப் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

 

நடிகை ரச்சிதா மகாலட்சுமி பேசுகையில் ,”இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை  பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் ஷரீஃப் பேசுகையில், “யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அஜித் படத்தொகுப்பு செய்கிறார். இசை பேட்டை வசந்த் இசையமைக்க, வேனு கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கலைமாமணி ஸ்ரீதர் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.