Oct 08, 2024 05:13 PM

ஒடிடி-யில் வெளியாகும் மாரி செல்வராஜின் ‘வாழை’!

ஒடிடி-யில் வெளியாகும் மாரி செல்வராஜின் ‘வாழை’!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘வாழை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வாழை படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினார்கள்.

 

இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்  கொண்டு,  இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது.

 

தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிறுவன் சிவனைந்தனின் (பொன்வேல்) வாழ்க்கையைச் சுற்றி, இப்படத்தின் கதை சுழல்கிறது. சிவனைந்தனின் தாய் மற்றும் சகோதரி இருவரும் வாழை வயல்களில் கூலிகளாக கடுமையாக உழைக்கிறார்கள், மேலும் சிறுவன் சிவனைந்தனும் பள்ளி விடுமுறை தினங்களில், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஒரு நாள், சிவனைந்தனின் தாயார் நோய்வாய்ப்பட்டு, அவருக்குப் பதிலாக தனது இளம் மகனை வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் வாழை.

 

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமான பொன்வேல் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் நடிகர்கள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் கலையரசன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் மற்றும் இசை சந்தோஷ் நாராயணன். கலை இயக்கம் குமார் கங்கப்பன் மற்றும் படத்தொகுப்பு சூர்யா பிரதாமன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

 

முழுக்க முழுக்க திருநெல்வேலியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே, அப்பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை, ஆழமாக பிரதிபலித்ததோடு, எளியவர்கள் வாழ்வியல் மற்றும் விவசாயிகளின் கடினமான வாழ்க்கையை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

 

இந்த நிலையில், ‘வாழை’ திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்ற ‘வாழை’ இனி உலகளவில் பல்வேறு மொழிப் பேசும் மக்களின் இதயங்களையும் வெல்லப் போகிறது.