Nov 28, 2020 11:06 AM

’மாஸ்டர்’ படக்குழு அரங்கேற்றிய ஒடிடி நாடகம்! - ஏன் தெரியுமா?

’மாஸ்டர்’ படக்குழு அரங்கேற்றிய ஒடிடி நாடகம்! - ஏன் தெரியுமா?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் கொரோனா பாதிப்பால் வெளியாகமல் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் படத்தை ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல், கொரோனா பாதிப்பால் பாதிப்படைந்த திரையரங்க உரிமையாளர்கள் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, திரையரங்கில் வெளியாவதாக இருந்த மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் என்ற ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் ஒன்று நேற்று தீயாக பரவியது. அந்த தகவலை பொய், என்று சிலரும், அது உண்மை என்று பலரும், வாட்ஸ்-அப் குரூப்களில் விவாதம் செய்ய, சிலர் நெட்பிளிக்ஸில் படம் ரிலீஸாவது உறுதி என்பதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டனர்.

 

இந்த நிலையில், ‘மாஸ்டர்’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது, என்பது படக்குழுவினரே அரங்கேற்றிய நாடகம், என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதாவது, பெரிய படங்களின் ரிலீஸின் போது, சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வசூல் ஆகும் தொகையில், 50 சதவீதம் பட தயாரிப்பாளருக்கும், 50 சதவீதம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் போகும். இந்த பங்கீடு ஒவ்வொரு வாரத்திற்கும் வித்தியாசப்படும். அதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இந்த பங்கீடு தயாரிப்பாளர்களுக்கு 70 சதவீதம் என்றும், தியேட்டர்காரர்களுக்கு 30 சதவீதம் என்று பங்கீடப்பட்டு வருகிறது.

 

ஆனால், மாஸ்டர் படம் தயராகி பல மாதங்கள் ஆனதால் தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கு ஏகப்பட்ட வட்டியாகிவிட்டதாலும், கேரளா மற்றும் சில வெளிநாடுகளில் திரையரங்கங்கள் திறக்கப்படாததாலும், அங்கிருந்து வரவேண்டிய வசூல் தயாரிப்பாளருக்கு கிடைக்காததால், மேலே குறிப்பிட்ட பங்கீட்டு விவாகரத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளார். அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 

இதனால் தான், மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸாகப் போவதையும், அதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் தகவலையும் ‘மாஸ்டர்’ படக்குழுவினரே வெளியிட்டு வைரலாக்கியுள்ளனர்.

 

இந்த தகவலால், மாஸ்டர் தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திரையரங்க உரிமையாளர்கள், அவர் சொல்வதில் நியாயம் இருப்பதாக கூறி, அவருடைய கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டார்களாம். மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் மட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

 

அதே சமயம், ‘மாஸ்டர்’ படத்தின் ஆன்லைன் வியாபாரம் ஏற்கனவே நடைபெற்று விட்டதாம். அமேசான் நிறுவனத்திடம் ஆன்லைன் உரிமையை விற்றுவிட்டார்களாம். அதனால், நெட்பிளிக்ஸில் படத்தை விற்க முடியாதாம். அப்படியே அந்த நிறுவனத்தில் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால், அமேசானிடம் போட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தான் நெட்பிளிக்ஸிடம் விற்க முடியுமாம். ஆனால், அது அவ்வளவு எளிதாக நடக்க கூடிய விஷயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

அதனால், ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் அறிவித்தபடி படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.