Dec 08, 2020 04:23 PM

விவசாயிகளின் துயரத்தை சொல்லும் ‘மிடி’ குறும்படம்!

விவசாயிகளின் துயரத்தை சொல்லும் ‘மிடி’ குறும்படம்!

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த பாரத் பந்துக்கு சில மாநில அரசுகளும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், பல்வேறு மாநிலங்களில் ரயில் மரியல் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில், சினிமாத்துறையிலும் விவாசயிகளுக்கு ஆதரவாக இன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

 

அது என்னவென்றால், ‘மிடி’ என்ற குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுக நிகழ்ச்சி தான். விவசாயிகளின் துன்பத்தையும், துயரத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த குறும்படத்தில் தாடி பாலாஜி மற்றும் ஷியமலா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்கள். ‘மிடி’ என்றால் வறுமை என்று அர்த்தமாகும்.

 

இன்று சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மக்கள் நீதி மையத்தின் துணை தலைவரும், எக்ஸ்போ வேன் பொள்ளாச்சியின் (EXPO VAN pollachi) சேர்மனுமான டாக்டர்.ஆர்.மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ‘மிடி’ குறும்படத்தை அறிமுகம் செய்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன், “நானும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். மூன்று தலைமுறையாக விவசாயத்தால் பல துன்பங்களை எதிர்க்கொண்டு நான்காவது தலைமுறையான, என் தலைமுறையில் தான் முன்னேற்றம் கண்டுள்ளோம். ‘மிடி’ குறும்படத்தில் காட்டிய காட்சிகளும், சம்பவங்களும் தற்போதும் தமிழகத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அது மாற வேண்டும், என்பது தான் அனைவரது எண்ணமும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விவசாயிகளின் துயரத்தை துடைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். காலம் இப்படியே சென்றால், மிகப்பெரிய புரட்சி ஏற்படும். வறுமையால் தான் புரட்சிகள் வெடிக்கும். அந்த ஒரு நிலை வரக்கூடாது என்பது தான் அனைவருடைய விருப்பமும்.” என்றார்.

 

குறும்படத்தில் நடித்திருக்கும் ஷியாமலா பேசுகையில், “இப்படி ஒரு குறும்படத்தை எடுத்ததில் பெருமை கொள்கிறோம். இந்த விழாவுக்கு வர சம்மதித்த எங்கள் துணை தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். என்னை நடிகையாக அறிமுகப்படுத்திய இயக்குநர் வில்சனுக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் வில்சன் பேசுகையில், “இப்படி ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்று எண்ணியபோது, சிலர் வேண்டாம் என்று சொன்னார்கள். ரொம்ப டிரையாக இருக்கிறது என்று எண்ணினார்கள். ஆனால், ஷியாமலா அவர்களிடம் சொன்ன போது ரொம்ப நன்றாக இருக்கிறது. பண்ணலாம், என்று ஊக்கப்படுத்தினார். அவர் இல்லை என்றால் மிடி குறும்படம் இல்லை. இதில் நடிக்க சம்மதித்த தாடி பாலாஜி. விஜய் டிவியில் ஏசி அறையில் உட்கார்ந்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரை நாங்கள் வெயிலில் ஒரு நாள் முழுவதும் நிற்க வைத்து படம் பிடித்தோம். அனைத்திற்கும் அவர் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால், அவருக்கு நாங்கள் ‘நட்பு நாயகன்’ என்ற படத்தை உங்கள் முன்பு வழங்குகிறோம்.” என்றார்.

 

நடிகர் பாலாஜி பேசுகையில், “நான் நடித்த ஒரு படத்திற்கு இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இது தான் முதல் முறை. இதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நண்பர் ஒருவர் என்னை ஒரு புகைப்படம் எடுத்தார். அதில் பஞ்சை நிற வேஷ்ட்டி கட்டிக்கொண்டு இருந்தேன். அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் இயக்குநர் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார். முதலில் என்னை அவர் நடிக்க அனுகிய போது, சார் காமெடி பண்ண சொன்ன பன்னிடுவேன். இது எப்படி என்றேன். அதற்கு அவர், “எத்தனை நாள் தான் காமெடியே பண்ணிட்டு இருப்பீங்க, இதுல சோகமாக நடிங்க” என்றார். என்னை கடந்த இரண்டு வருடமாக பின் தொடர்ந்தார் என்று நினைக்கிறேன். இருந்தாலும், இந்த குறும்படம் மூலம் எனக்கு இப்படியும் நடிக்க தெரியும் என்று நிரூபிக்க காரணமாக இருந்த இயக்குநருக்கு நன்றி.” என்றார்.

 

 

ரெட் வுட்ஸ் மீடியா மற்றும் ஷியாம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மிடி’ குறும்படத்தை வில்சன்.ஜெ.அம்பி இயக்கியுள்ளார்.