Jan 09, 2023 08:29 AM

என்னுடைய அடையாளம் சினிமா இல்லை! - நடிகர் சிவகுமார்

என்னுடைய அடையாளம் சினிமா இல்லை! - நடிகர் சிவகுமார்

ஓவியர் மற்றும் நடிகராக புகழ் பெற்ற சிவகுமார், தற்போது மேடை பேச்சாளராக புகழ் பெற்று வருகிறார். அதிலும் கம்பராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகளை அவர் விவரித்த விதத்தால் பல கோடி மக்களை சென்றடைந்ததோடு, இளைஞர்களும் கவரப்பட்டனர்.

 

இந்த நிலையில், கம்பராமாயணம் மற்றும் மஹாபாரதம் போல் திருக்குறளையும் மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்த சிவகுமார், 100 நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில்  'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர் , பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள்.  அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார். 

 

'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு'  என்ற குறளில் தொடங்கி  நூறாவது கதையாக மலக்குழியில் இறங்கி உயிர்விடும்   துப்புரவுத் தொழிலாளியின் கதை வரை  கூறி 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்

 

சிவகுமாரின் ‘திருக்குறல் 100’ நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும், யூடியுப் மூலமாகவும் உலகம் முழுவதும் சென்றடைய உள்ளது. ’திருக்குறள் 100’  சிறப்பு நிகழ்ச்சியாக  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் தொடங்கி காணும் பொங்கல் வரை தொடர்ந்து 3 நாட்கள் (15.1.23,16.1.23, 17.1.23 ஞாயிறு ,திங்கள் மற்றும் செவ்வாய் ) ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சிவகுமார், “40 ஆண்டுகள் திரைப்படங்களில், நாடகங்களில், சின்னதிரையிலும் பணியாற்றினேன். என் 64 வயதில் இனி மேக்கப் போட்டு நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். ஸ்டாலின் குணசேகரன் 18 ஆண்டுகளாக ஈரோடு புத்தக விழாவை  எந்த நுழைவு  கட்டணமும் இல்லாமல் நடத்தி வருகிறார். அவர் தான் என்னை மேடைப்பேச்சுக்கு அழைத்து வந்தவர். பின்னர் இலக்கியம் பக்கம் திரும்பினேன். கம்பராமாயணம் மொத்த கதையையும் 100 பாடல்கள் வழியாக விளக்கிப் பேசிய முதல் மனிதர்  நான் தான் என இப்போது கூறுகிறார்கள். அது மிகப்பெரும் மகிழ்ச்சி. மகாபாரதத்தை 2.10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன். இவையெல்லாம் இப்போது யூடியூப் தளத்தில் கிடைக்கிறது. இப்போது திருக்குறளைப் பேசியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று முதலில் பயமுறுத்தினார்கள். 3 .1/2 வருடம் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன். இப்போது இதன் உரிமை பெற்று  புதிய தலைமுறை பொங்கல் திருநாளில் ஒளிபரப்புகிறார்கள். எல்லோரும் பார்த்து ரசியுங்கள்.” என்றார். 

 

Sivakumar in Thirukural 100

 

மேலும், கம்பராமாயணம், மஹாபாரதம் மற்றும் திருக்குறல் பற்றி பேசுகிறீர்கள், திரைப்படங்களிலும் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தீர்கள் இரண்டில் எது உங்களுக்கு மன நிறைவை கொடுக்கிறது? என்ற கேள்விக்கு பதில் அளித்த சிவகுமார், “நான் 7 ஆண்டுகளில் வரைந்த ஓவியத்தை இப்போது என்னால் வரைய முடியாது. அதேபோல், மஹாபாரதம், கம்பராமாயணம், திருக்குறள் பற்றி நான் பேசிய இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பேச முடியாது. நடிகராக சுமார் 190 படங்களில் நடித்திருக்கிறேன், இருந்தாலும் என்னை நான் சிறந்த நடிகன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். நல்ல நடிகர் என்றால் இரண்டு பேர் மட்டும் தான். சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் இவரகள் இரண்டு பேரை மட்டும் தான் நல்ல நடிகன் என்ற பட்டியலில் நான் வைத்திருக்கிறேன். சினிமா தான் எனக்கு அத்தனையும் கொடுத்தது. இங்கு நான் நிற்பதற்கு சினிமா தான் காரணம், செல்வம், பேர், புகழ் என சினிமா எனக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறது, அனை நான் மறுக்கவில்லை. ஆனால், மஹாபாரதம், கம்பராமாயணம், திருக்குறள் பற்றி பேசுவதை தான் என் அடையாளம்.” என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில், ‘திருக்குறள் 100’-க்காக நடிகர் சிவகுமாருக்கு உதவி செய்த திருக்குறள் சரவணன் கலந்துக்கொண்டார்.