Oct 11, 2022 04:24 PM

2வது வாரத்திலும் தொடரும் ‘நானே வருவேன்’ படத்தின் வசூல் வேட்டை!

2வது வாரத்திலும் தொடரும் ‘நானே வருவேன்’ படத்தின் வசூல் வேட்டை!

தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் தனுஷ், நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்ததால், படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

 

தனுஷ் இரட்டை வேடத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சைக்கோ மற்றும் அமானுஷ்யம் இரண்டையும் இயல்பாகவும், வித்தியாசமாகவும் கையாண்டிருந்த இயக்குநர் செல்வராகவன், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் படத்தை இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

 

இந்த நிலையில், படம் தற்போது இரண்டாவது வாரத்திலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

மேலும், நாளுக்கு நாள் மக்களின் வருகை அதிகரித்து வருதால், திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, தீபாவளி பண்டிகையின் போதும் ‘நானே வருவேன்’ படத்தை ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

 

இதற்கிடையே, ‘நானே வருவேன்’ படத்தின் “ரெண்டு ராஜா...” வீடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து பாடல் வைரலாகி வருகிறது.