டிசம்பரில் வெளியாகும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'!

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras).
பிரசாத் முருகன் இயக்கும் இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
முக்கிய வேடங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத், திருநங்கை தீக்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.
ஹைபர் லிங்க் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் முருகன் கூறுகையில், “மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலையை பொறுத்து கிடைக்கும் சந்தர்ப்பம் தான் ஹீரோ, அது தான் வில்லன். காரணம் ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.
அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்” என்றார்.
வரும் டிசம்பர் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.