Nov 08, 2022 05:50 PM

நவம்பர் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பரோல்’

நவம்பர் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பரோல்’

ட்ரிப்பர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் ’பரோல்’.

 

வரும் நவம்பர் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு படம் குறித்து பேசினார்கள்.

 

நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் பேசுகையில், ““இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும்.  அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படத்தின் வெற்றி இது போன்று உள்ள படங்கள் கொண்ட கதை வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நாஞ்சில் சம்பத் பேசுகையில், “மிகவும் நுணுக்கமான கதையை அடையாளம் கண்டு, அதில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்த கதையில் அம்மாவிற்கும் மகனுக்குமான பாசத்தை அழகான திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனைகள் கொண்ட ஆட்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் இந்த படமும், இந்த படக்குழுவும் கண்டிப்பாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் துவாரக் ராஜா பேசுகையில், “இந்த படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. அவர் என்னை முழுமையாக நம்பினார். இந்த படம் ஒரு குடும்பத்தை  பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்த படத்தில் நடித்த  பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.” என்றார்.

 

நடிகர் லிங்கா பேசுகையில், “தயாரிப்பாளர் மது அவர்களுக்கு சினிமா மீது அதிகமான காதலும், அர்பணிப்பும் இருக்கிறது. இந்த படத்தின் திரைக்கதை ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும். நாங்கள் இதை வித்தியாசமான பாணியில் இருக்குமாறு தான் உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகை கல்பிக்கா பேசுகையில், “என்னை இந்த படத்தில் நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் ஒன்றாக  படத்தை பார்த்தோம். படத்தை பார்த்த பிறகு  எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். படக்குழுவில் உள்ள அனைவரும் என்னை வீட்டில் இருப்பதை போல் பார்த்து கொண்டனர். படம் பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல் பேசுகையில், “என்னைப் போன்ற ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது ஒரு கனவு படம். இந்த படத்தில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். எனது திறமையை வெளிகாட்ட எனக்கு இதில் நிறைய ஸ்கோப் இருந்தது. நவம்பர் 11க்கு பிறகு இந்த படம் அனைவருக்கும் சொந்தமானது. அனைவரும் தியேட்டரில் படத்தை பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் மேக் மணி பேசுகையில், “நானும் இயக்குனர் துவாரக் ராஜாவும் குறும்படங்களில் இருந்தே நண்பர்கள். பரோல் திரைப்படம் எங்கள்  குழுவின் கூட்டு முயற்சி. பார்வையாளர்கள் எங்கள் முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.

 

ஆர்.எஸ்.கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

ராஜ்குமார் அமல் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். முனிஸ் படத்தொகுப்பு செய்ய, அருண்குமார்.ஏ கலையை நிர்மாணித்துள்ளார்.