Sep 30, 2022 08:30 PM

கேமராவுக்கு பின்னால் இயங்கும் திரை பிரபலத்தை ஹீரோவாக்கிய விஜய்ஸ்ரீ ஜி!

கேமராவுக்கு பின்னால் இயங்கும் திரை பிரபலத்தை ஹீரோவாக்கிய விஜய்ஸ்ரீ ஜி!

திரையில் தோன்றி ரசிகர்களிடம் பிரபலமாக இருப்பவர்களைப் போல், திரையில் தோன்றாமல் கேமராவுக்கு பின்னால் இயங்கும் பலர் திரையுலகில் பிரபலங்களாக வலம் வருகிறார்கள். அப்படி ஒரு பிரபலம் தான் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன். 

 

ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், அல்லு அர்ஜுன் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றியதோடு, சுமார் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றியிருப்பதோடு, தற்போதும் பிஸியான மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

 

இப்படி கேமராவுக்கு பின்னால் பிரபலமாக வலம் வரும் நிகில் முருகனை இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி, ‘பவுடர்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

 

பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை 'தாதா 87' திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியதோடு, பல வெள்ளி விழா படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் மோகனை வைத்து 'ஹரா' படத்தை இயக்கி வரும் விஜய்ஸ்ரீ ஜி, 26 வருடங்களாக வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக பயணித்து கொண்டிருக்கும்  நிகில் முருகனை கேமராவிற்கு முன் கொண்டு வருகிறார்.

 

இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் தன்னையும் கதையையும் நம்பி மட்டுமே இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி  துணிச்சலான முயற்சிகளில் ஈடுபடுவது ஆகும். 

 

படத்தை பற்றி விஜய்ஸ்ரீ ஜி கூறுகையில், ”அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவுடர் போடுவதில் நிஜ முகங்கள் தொலைகிறது.

 

ஒரு இரவில் நடக்கும் இந்த கதை நமது வாழ்க்கையில் தினம்தோறும் நாம் கடந்து சென்ற நினைவுகளை ஞாபகப்படுத்தும். அதே போல ஒரு உயர் அதிகாரி தனக்கு கீழே பனிபுரிபவர்களை சரிசமமாக கருத வேண்டும் என்கிற கருத்தையும் பதிவு செய்யும்.” என்றார்.

 

மேக்கப் மேனாக பணிபுரியும் ஒரு சராசரி குடும்ப தலைவர் கதாபாத்திரத்தில் விஜய்ஸ்ரீ ஜி நடித்துள்ளார், பாசமிகு தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் கதைப்பகுதிகளில் வையாபுரி மற்றும் அனித்ரா நாயர் நடிக்கின்றனர். 

 

உயர் அதிகாரிகளால் அவமதிக்க படும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நிகில் முருகன் வருகிறார். அரசியல்வாதிகளால் வாழ்வாதாரங்களை இழக்கும் இளைஞர்களும் கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர். 

 

இவர்கள் நால்வரும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் என்ன ஆகிறது, என்ன தீர்வு கிடைக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லும் படம் தான் பவுடர். 

 

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

 

இந்த நிலையில், ‘பவுடர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.