Jun 26, 2024 05:50 AM

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார். இதற்கிடையே, சல்மான் கானை வைத்து விரைவில் பாலிவுட் படம் ஒன்றை தொடங்க இருக்கும் விஷ்ணு வர்தன், தற்போது தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜயின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக சேவியர் பிரிட்டோவின் மருமகனும், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

 

அட்வெஞ்சர் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விஷ்ணு வர்தன் நாடு முழுவதும் உள்ள முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், அறிமுக நடிகரான ஆகாஷ் முரளியுடன் அவர் புதிய படத்தில் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

 

இதுபற்றி இயக்குநர் விஷ்ணு வர்தர்ன் கூறுகையில், “ நான் அவருக்குள்ளிருக்கும் ‘ஸ்டார்’ரைப் பார்க்கிறேன்.  ஆகாஷ் ஒரு திறமையான கலைஞர். மேலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது நடிப்புத் திறனை மெருகேற்ற நிறைய தயார் செய்துள்ளார். அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார்.

 

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறுகையில், “நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணு வர்தனுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. விஷ்ணு வர்தன் தனது ஹீரோக்களை எப்போதும் அழகாக திரையில் காண்பிப்பார். இந்தப் படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு அழகான அறிமுகமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

 

ஆகாஷ் முரளியின் மனைவி சினேகா பிரிட்டோ இப்படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் திரைக்கதையை நீலன் சேகருடன் இணைந்து விஷ்ணு வர்தன் எழுதியுள்ளார். கேமரூன் எரிக் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஓம் பிரகாஷ் கூடுதல் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, சரவணன் வசந்த் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பா.விஜய் மற்றும் ஆதேஷ் கிருஷ்ணா பாடல்கள் எழுதுகிறார்கள். ஃபெடரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பாளராகவும், அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். மக்கள் தொடர்பு பணியை சுரேஷ் சந்திரா கவனிக்கிறார்.