ராகவா லாரன்ஸின் 25 வது படம் அறிவிப்பு!

நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, பிறகு நடன இயக்குநர் உருவெடுத்து, இயக்குநர் அவதாரம் எடுத்த ராகவா லாரன்ஸ், தற்போது முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ராகவா லாரன்ஸின் படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதால், அவரது படங்கள் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் 25 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனம் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ராகவா லாரன்ஸின் 25 வது படத்தை தயாரிக்கின்றனர்.
’மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்ச்சர் ஆரம்பம்’ என்ற உற்சாக செய்தியுடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனம் முன்பு தயாரித்த ‘ராக்ஷசுடு’ மற்றும் ’கிலாடியை’ இயக்கிய ரமேஷ் வர்மா இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.
பிரபல தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா இப்படத்தை தயாரிக்கிறார். பான் இந்திய படமாக வெளியாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நடிகர் ராகவா லாரன்ஸின் நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது. இந்த படம் குறித்தான மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படப்பிடிப்பு நவம்பர் 2024 முதல் தொடங்குகிறது.