Feb 26, 2023 02:50 PM

5 மொழிகளில் வெளியாகும் ரித்திகா சிங்கின் ‘இன் கார்’ திரைப்படம்!

5 மொழிகளில் வெளியாகும் ரித்திகா சிங்கின் ‘இன் கார்’ திரைப்படம்!

‘இறுதிச்சுற்று’ படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை ரித்திகா சிங், தமிழ் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தாலும் கதை தேர்வில் மிக கவனமாக இருக்கிறார். அந்த வகையில், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘இன் கார்’ என்ற திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

 

க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘இன் கார்’-ல் ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சந்தீப் கோயத், மனிஷ் ஜான்ஜோலியா, ஞான பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி ஆகியோர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கியிருக்கிறார். 

 

இப்படத்தின் தமிழ் பதிப்பை, தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிருவமான ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். வரும் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், “’இன் கார்’ படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும்,  இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே "இன் கார்". இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

Rithika Singh

 

நடிகை ரித்திகா சிங் பேசுகையில், “’இன் கார்’ படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை "இன் கார்" படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் நன்றி.” என்றார்.

 

மேலும், ‘இறுதிச்சுற்று’ படம் போல் இந்த படத்திலும் ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர், “ரித்திகா சிங்கின் நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருக்கும். அவர் விருதை எதிர்பார்த்து இந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொன்னாலும், நிச்சயம் இந்த படம் ரித்திகா சிங்கிற்கு பல விருதுகளை பெற்று கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.