Jul 08, 2024 05:54 PM

ஆர்யா தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் சந்தானம்!

ஆர்யா தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் சந்தானம்!

சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வியாபரம் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அப்படத்தின் அடுத்த பாகத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ளார். நிஹாரிகா எண்டர்டெயின் மெண்ட், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள், சந்தானத்தின் ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்குகிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை இயக்கிய எஸ்.பிரேம் ஆனந்த் இயக்குகிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகையர் பற்றிய தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

 

தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்பு செய்ய, ஏ.ஆர்.மோகன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

 

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் திரையுலக பிரமுகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

 

படம் குறித்து இயக்குநர் பிரேம் ஆனந்த் கூறுகையில், “கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்.

 

மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்க உள்ளோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்.” என்றார்.