Feb 21, 2023 06:03 AM

ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான் - நடிகர் சத்யராஜ்

ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான் - நடிகர் சத்யராஜ்

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ்குமார் தயாரிப்பில் பி.ஜி.மோகன் - எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ராம் குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். 

 

நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், “இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“ என்றார்.

 

இயக்குநர் ஹரி பேசுகையில், “படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

Theerkadarshi Audio Launch

 

நடிகர் ராம்குமார் சிவாஜி கணேசன் பேசுகையில், “இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்தின் காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசுகையில், “காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் அஜ்மல் பேசுகையில், “சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி” என்றார்.

 

துஷ்யந்த் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் பி.ஜி.மோகன் பேசுகையில், “இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி பேசுகையில், “பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மீண்டும் இயக்குநராக வந்து இருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்கக் காரணம், ஹரி சார் உடன் நாங்கள் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான். அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு  உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.