Sep 06, 2024 07:42 PM

பாலியல் குற்றச்சாட்டு! - நடிகர் நிவின் பாலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர்கள்

பாலியல் குற்றச்சாட்டு! - நடிகர் நிவின் பாலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர்கள்

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் கேரள திரை பிரபலங்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகும் நிலையில், தற்போது நடிகர் நிவின் பாலியின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி, தன்னிடம் நிவின் பாலி பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து, கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர். 

 

ஆனால், இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்த நடிகர் நிவின் பாலி, புகார் அளித்திருக்கும் பெண் யார் என்றே தனக்கு தெரியாது, என்று மறுத்ததோடு, தன் மீது சுதமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நிரூபிக்க எந்த நிலைக்கும் செல்வேன், என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நடிகர் நிவின் பாலி, அப்படிப்பட்டவர் இல்லை, அவருக்கும் இந்த புகாருக்கும் எந்த தொடரும் இல்லை, என்று இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

 

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும்,  பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

 

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

 

மேலும், தன் மீது பொய்யான புகார் அளித்திருக்கும் அந்த பெணுக்கு எதிராக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்துள்ள நடிகர் நிவின் பாலி, தனது எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.