Oct 09, 2024 10:30 AM

சூர்யாவின் 44 வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

சூர்யாவின் 44 வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

சூர்யா நடிப்பில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் ‘கங்குவா’ இந்திய அளவில் எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாகும். அங்கோடபர் மாதம் கங்குவா வெளியாக இருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த அவரது 44 வது படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டருடன், தலைப்புக்கான டீசரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.