Aug 07, 2021 10:24 AM

சன்னி லியோன் நாயகியாக நடிக்கும் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சன்னி லியோன் நாயகியாக நடிக்கும் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதோடு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வரும் சன்னி லியோன், முதல் முறையாக தமிழ்ப் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார். ‘ஷெரோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் உருவாகிறது.

 

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படத்தின் இயக்குநர் ஸ்ரீஜித்துடன் இணைந்து நடிகை சன்னி லியோன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

படம் குறித்து இயக்குநர் ஸ்ரீஜித் கூறுகையில், “ஷெரோ, ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாக பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை சன்னி லியோனின் கடுமையான உழைப்பு குறித்து குறிப்பிடாமல் இருக்க இயலாது. படப்பிடிப்பு நிறைவடைந்த போது ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.” என்றார்.

 

நடிகை சன்னி லியோன் கூறுகையில், “ஷெரோ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷெரோவும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.” என்றார்.