Sep 26, 2024 05:49 AM

விளம்பரத்தை வித்தியாசமாக மேற்கொள்ளும் ‘பன் பட்டர் ஜாம்’ படக்குழு!

விளம்பரத்தை வித்தியாசமாக மேற்கொள்ளும் ‘பன் பட்டர் ஜாம்’ படக்குழு!

பிக் பாஸ் புகழ் ராஜூ நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பன் பட்டர் ஜான்’. ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை,  வி.ஜே.பப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

 

தற்போதைய இளைய தலைமுறை உறவைப் பற்றி நகைச்சுவையுடன் சொல்லும் அழகான டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தை ரைன் ஆஃப் ஏரோவ்ஸ் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்க, இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்தியாசமான முறையில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பார்வை போஸ்டரும் வித்தியாசமான முறையில், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் என்ற சொகுசுக்கப்பலில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரை வரலாற்றில் ஒரு சொகுசுக்கப்பலில் ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியானவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்ச்சியில் சொகுசுக்கப்பலில் பயணித்த பயணிகளுடன் உரையாடி, படத்தினைப்பற்றிய தகவல்களை படக்குழு பகிர்ந்துக் கொண்டது. மேலும், இந்த நிகழ்ச்சியின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

 

இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம். 

 

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

 

இப்படத்தை இயக்கும் ராகவ் மிர்தாத், ‘சைஸ் ஜீரோ’ மற்றும் ‘பாரம்’ படங்களின் திரைக்கதை எழுதியதோடு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அவர் இயக்கும் இரண்டாவது படமான ‘பன் பட்டர் ஜாம்’ அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் பிலிம் எண்டடெயினராக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.