Mar 14, 2022 05:00 PM

”யாரும் பேசாத ஒரு விசயம் தான் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதை” - நடிகர் சூர்யா பேச்சு

”யாரும் பேசாத ஒரு விசயம் தான் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதை” - நடிகர் சூர்யா பேச்சு

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா கோகன் நடித்திருக்கிறார். வில்லனாக வினய் நடிக்க, சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வன்னன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கல் நடித்திருக்கிறார்கள்.

 

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தின் புதிய டிரைலர் இன்று வெளியானது. இதற்காக சென்னை சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சூர்யாவின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொள்ள அவர்களுக்காக புதிய டிரைலர் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, “இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால் உக்ரைனில் எதுவுமே அறியாத அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு கூட்டு பிரார்த்தனை என் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப வேண்டுமென ஒரு சில நிமிடங்கள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்திப்போம்.

 

நான் திரையரங்கில் தான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். வெற்றி படமா.. தோல்வி படமா.. நல்ல படமா.. தரமான படமா.. என்பதை திரையரங்குகள் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். அதுவும் ரசிகர்கள் மூலமாகவே அதனை சந்தித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு பொருத்தமான படமாகத்தான் ‘எதற்கும் துணிந்தவன்’ தயாராகியிருக்கிறது.

 

ஏனைய படங்களின் படப்பிடிப்பு போலல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவிட் காரணமாக மறக்க முடியாததாக இருந்தது. வழக்கமான படப்பிடிப்பை போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதற்கு ஒத்துழைத்த படக்குழுவினருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும், படப்பிடிப்பு தளம் முழுவதும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து பிறகு வேலை செய்தனர். படப்பிடிப்பில் கலந்துகொண்ட கடைநிலை ஊழியர் முதல் அனைவருக்கும் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முழு அக்கறையுடன் பேணி பாதுகாத்தனர். திருவிழா காட்சி படமாக்கும் போதும் இதனை முறையாக பின்பற்றினர்.

 

Etharkkum Thunindavan

 

இந்தப்படத்தின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்காவிடம் ‘காக்க காக்க’ படத்தை பார்த்த போது உங்கள் வயது என்ன? எனக் கேட்டேன். அவர் ‘மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்’ என்றார். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய ரசிகையாக இருந்த பெண், தற்போது எனக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

 

இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு ஏராளமாக இருக்கிறது. பழைய மூடநம்பிக்கைகளாக இருக்கலாம். பழகிக் கொண்ட வசதிகளாக இருக்கலாம். சௌகரியங்களாக இருக்கலாம். இது போன்றவற்றை இழக்கத் தயாராகி, புது முயற்சியுடன் பயணப்பட்டால் ஏராளமான இலக்குகளை அடையலாம். இழப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.

 

கோவிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகாலம் அனைத்தும் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. எல்லா விசயத்திலும் எல்லை தாண்டி சிந்திக்காதீர்கள். உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ..! அதை மட்டும் கேளுங்கள்.

 

இப்படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ், நான் 2டி எனும் நிறுவனத்தை தொடங்க காரணமாக இருந்தவர். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதை விவரிக்கும் முன்னர் என்னிடம், ‘உங்கள் ரசிகனாக இருந்து இப்படத்தை இயக்கவிருக்கிறேன்’ என சொன்னார். அப்போது தான் அவருடைய மனதில் எந்த உயரத்தில் நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் தான் சொல்கிறேன், ‘இந்தப் படம் எதற்கும் துணிந்த ரசிகர்களான உங்களுக்குத்தான். உங்களுக்காகத்தான்’. இந்தப்படத்தில் யாரும் பேசாத ஒரு விசயத்தை, பொறுப்புணர்வுடனும் அற்புதமான கதையாக விவரித்திருக்கிறார் இயக்குநர்  பாண்டிராஜ்.

 

 

‘ஜெய்பீம்’ பட வெளியீட்டின்போது சில எதிர்பாராத சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெற்றது. சில தவறுகளும், சில தர்ம சங்கடங்களும் ஏற்பட்டன. அனைவரும் அனைத்து விசயங்களையும் புரிந்து கொண்டனர். ஆனால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் பல நெருக்கடிக்கு ஆளானார்கள். அதனை ரசிகர் மன்றத்தினர் மிகவும் பக்குவப்பட்ட மனநிலையில் கையாண்டனர். இதையும் நான் பார்த்தேன். இந்த இளம் வயதில் உங்களிடம் இருந்த பக்குவத்தை கண்டு நான் வியந்தேன். அதற்கு நான் தலை வணங்குகிறேன். கடந்த 25 ஆண்டு காலமாக என் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களை கடவுளாக தான் காண்கிறேன். மார்ச் 10 ஆம் தேதி முதல் மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.” என்றார்.