Dec 18, 2022 10:30 AM

சர்வதேச பிரச்சனையை பேசும் திரிஷாவின் ‘ராங்கி’! - டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது

சர்வதேச பிரச்சனையை பேசும் திரிஷாவின் ‘ராங்கி’! - டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில், எம்.சரவணன் இயக்கத்தில், திரிஷாவின் நடிப்பில் பிரமாண்ட ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘ராங்கி’. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு திரைக்கதை அமைத்து எம்.சரவணன் இயக்கியிருக்கும் இப்படம் சர்வதேச பிரச்சனையை பேசுகிறது.

 

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எம்.சரவணன், தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ ஆகிய வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது திரிஷாவை கதையின் நாயகியாக வைத்து ‘ராங்கி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதைக்கு எம்.சரவணன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளீயீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. அதன்படி, ‘ராங்கி’ திரைப்படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Raangi

 

இந்த நிலையில், ‘ராங்கி’ படம் பற்றி இயக்குநர் எம்.சரவணன் கூறுகையில், “திரிஷா இந்த பத்தில் பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். அவருடைய அண்ணன் மகளுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக திரிஷா களத்தில் இறங்குகிறார். ஆனால், அந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து சர்வதேச அளவிலான பிரச்சனையாக மாறுகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்தியாவை தாண்டி திரிஷா பயணிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? அந்த பிரச்சனை என்ன? என்பதை விவரிப்பது தான் படம்.

 

ராங்கி என்றாலே திமிர் பிடித்தவள் என்று சொல்வார்கள். ஆனால், திரிஷாவின் கதாபாத்திரம் எது தனக்கு சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய்வார், யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட மாட்டார். அதனால் தான் இந்த தலைப்பு. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இருக்கிறது. திரிஷா சிறப்பாக நடித்திருக்கிறார். 

 

படத்தில் திரிஷாவின் அண்ணன் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை வரும், அந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் திரிஷா ஈடுபடுவார். இது தான் மையக்கருவாக இருந்தாலும், மற்றொரு கிளை கதையும் படத்தில் சொல்லியிருக்கிறேன். அந்த கதை சர்வதேச பிரச்சனையை பேசும். அதுவே படத்திற்கு கொஞ்சம் சிக்கலாகவும் இருந்தது. அதனால் தணிக்கை சான்றிதழ் பெறவும் கஷ்ட்டமாக இருந்தது. சர்வதேச பிரச்சனை, அதுவும் நடந்த உண்மையை சொல்லும் போது சென்சாரில் அந்த காட்சிகளை நீக்க சொல்லிவிட்டார்கள். நிறைய காட்சிகளுக்கு மியூட் கொடுக்க சொல்லிவிட்டார்கள். நானும் அவர்கள் சொன்னபடி செய்திருக்கிறேன். இதனால் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காரணம் இது ஒரு கிளை கதை மட்டுமே, மற்றபடி முக்கியமான கருவே வேறு, அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.” என்றார்.

 

Raangi

 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார்? என்று கேட்டதற்கு, “படத்தை பார்த்துவிட்டு அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். அவர் நினைத்ததை விட படம் மிகப்பெரிய அளவில் வந்திருப்பதாக கூறினார். நடிகை திரிஷாவும் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார். படம் நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் விதமாக வந்திருக்கிறது.” என்றார்.

 

திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் அனஷ்வர ராஜா, ஜான் மகேந்திரன், லிஸி அந்தோணி, வாக்கர் கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.  சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார்.