வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை சொல்ல வரும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’

முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கைத் திரைப்படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் நடித்து வரும் ஜெ.எம்.பஷீர், தனது டிரண்ட்ஸ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற படத்தை தயாரிப்பதோடு, அப்படத்தின் முக்கிய வேடமான பெரிய மருது வேடத்திலும் நடிக்கிறார்.
‘தேசிய தலைவர்’ படத்தை இயக்கும் ஆர்.அரவிந்தராஜ் இயக்கும் இந்த படத்தில் வேலு நாச்சியார் வேடத்தில் அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கிறார். இவர் தயாரிப்பாளரும், நடிகருமான ஜெ.எம்.பஷீரின் மகள் என்பது குறிப்படத்தக்கது.
இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தேவர் மஹாலில் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.
படம் குறித்து பேசிய ஜெ.எம்.பஷீர், “வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி.
நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம். இதன் காரணமாகவே 'தேசிய தலைவர்' மற்றும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' உள்ளிட்ட திரைப்படங்களை நான் தயாரித்து வருகிறேன். இப்படத்தின் திரைக்கதை பல வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
’தேசிய தலைவர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், அதை தொடர்ந்து ‘வீர மங்கை வேலுநாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் திட்டமிட்டுள்ளார்.
ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைய உள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஜெ எம் பஷீர் கூறினார்.