Mar 06, 2025 07:21 PM

’நிறம் மாறும் உலகில்’ திரைப்பட விமர்சனம்

c6202d3ee3b781aa90642bfca2a01148.jpg

Casting : Bharathiraja, Natty, Rio Raj, Sandy, Yogi Babu, Vadivukarasi, Aadhira, Thulasi, Khanika, Lovlyn, Rishikanth, Agen, Vigneshkanth, Kavya Arivumani, Suresh Menon, Suresh Chakravarthy, Aadukalam Naren

Directed By : Britto JB

Music By : Dev Prakash Regan

Produced By : Signature Productionsz & GS Cinema International - L Catherine Shoba & Lenin

 

அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் யோகி பாபுவை சந்திக்கிறார். லவ்லினின் நிலையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, அம்மா என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’அம்மா’ என்ற உறவு மட்டுமே. 

 

அம்மா பாசத்திற்காக ஏங்கும் தாதா, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும் மகனின் சோகம், அம்மா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், என்று நான்கு விதமான கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் அம்மா மீதான பாசப் போராட்டம் தான் ‘நிறம் மாறும் உலகில்’.

 

நான்கு கதைகளின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி,  ரியோ ராஜ், பாரதிராஜா - வடிவுக்கரசி, சாண்டி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு நேர்த்தி.

 

இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் ஓகே ரகம் தான்.

 

படத்தொகுப்பாளர் தமிழ் அரசன் இயக்குநர் காட்சிப்படுத்திய நான்கு கதைகளையும் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொடுத்திருக்கிறாரே தவிர தனித்துவமாக எதையும் செய்யவில்லை.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரிட்டோ ஜே.பி, நான்கு கதைகளையும் அம்மா செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை பிழிந்திருபதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும், ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு பிளாஷ்பேக் என்று படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. 

 

மொத்தத்தில், ‘நிறம் மாறும் உலகில்’ சோகமான உலகம்.

 

ரேட்டிங் 2/5