‘இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம்

விவசாயியான நாயகன் ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ரவி தேஜா, ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு வேண்டிய பிறகு பிறந்த குழந்தை என்பதால், தன் மகள் மீது கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு போல், ஐயப்பன் மீதும் அளவுக்கு அதிகமான பக்தி கொண்டிருக்கிறார். அதே சமயம், அதீத மது பிரியரான ரவி தேஜா, ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போட்டு கடுமையாக விரதம் இருக்கிறார்.

இந்த நிலையில், ரவி தேஜா மகள் படிக்கும் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு மாணவி திடீரென்று படிப்பை பாதியில் விட்டுவிட்டு தலைமறைவாகிறார். ஆசிரியை சுவாசிகா சிறப்பு வகுப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட சில மாணவிகளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இப்படி மாணவிகளை சுற்றி நிகழும் மர்ம சம்பவங்களுக்கான பின்னணி பற்றி ரவி தேஜாவின் மகளுக்கு தெரிய வருகிறது. அதை தன் தந்தையிடம் சொல்லி அவர்களை காப்பாற்ற நினைக்கிறார். ஆனால், அதற்கு ரவி தேஜாவின் மது பழக்கமும், ஐயப்பனுக்கு மாலை போட்டதும், தடையாக அமைகிறது. அந்த தடை நீங்கி, மகள் சொல்ல நினைத்தது தந்தை ரவி தேஜாவுக்கு தெரிந்ததா ?, மாணவிகளை காப்பாற்றினாரா ? என்பதை உணர்ச்சிகரமாகவும், மாஸாகவும் சொல்வது தான் ‘இருமுடி கட்டு’.

மாஸ் மகாராஜா என்ற பட்டப் பெயருடன் வலம் வரும் ரவி தேஜா, இதில் தனது மாஸை குறைத்துக் கொண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கிளாஸாக நடித்திருக்கும் ரவி தேஜா, பெண் பிள்ளைகள் அனைவரையும் தன் மகள்களாக பார்ப்பது தனது மோசமான பலவீனம், என்று கூறி அவர்களது பிரச்சனையை தீர்க்கும் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார்.

ரவி தேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், மகளாக நடித்திருக்கும் சிறுமி நக்‌ஷத்ரா இருவரும் தங்களது நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சிறுமி நக்‌ஷத்ரா தனது பார்வையின் மூலமாகவே பலவித உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, மீசாலா லக்‌ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, கிஷோர் கசிரப்பளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, கிரைம் திரில்லர், அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாஸ் என மூன்று விதமான பரிணாமங்களை தனது கேமரா மூலம் பார்வையாளர்களிடம் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் டப்பிங் படம் போல் அல்லாமல் ஒரிஜினல் படம் போல் அமைந்திருக்கிறது. பின்னணி இசை மகள் மீது அப்பாவுக்கு இருக்கும் அன்பையும், அது தொடர்பான காட்சிகளையும் கண் கலங்க வைக்கும் விதத்தில் பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது.

அமைதியான குடும்ப நாடகம், திரில்லர், மாஸ், கமர்ஷியல் மற்றும் சமூகத்திற்கான அறிவுரை என திரைக்கதையில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் படத்தொகுப்பாளர் பிரவீன் பவுடி, காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சிவா நிர்வாணா, எளிமையான ஒரு கதையை மிக வலிமையாக சொல்லும் வித்தையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு அவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு, கதையின் போக்கை மாற்றாமல் அதே சமயம் கதை சொல்ல வரும் விசயத்தை பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.

கதையின் துவக்கத்தில் இருந்தே பயணிக்கும் அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாணவிகளின் பிரச்சனைகள் திரைக்கதையை சுவாரஸ்யமாகவும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடும் நகர்த்திச் செல்கிறது. இரண்டாம் பாதியில் வரும் எதிர்பார்க்காத திருப்பம் பார்வையாளர்களின் இதயங்களை கனக்கச் செய்து, படத்தின் இறுதி வரை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

மொத்தத்தில், ‘இருமுடி கட்டு’ வெற்றிக்கொடி கட்டுவது உறுதி.

ரேட்டிங் 4 /5

irumudi kattu reviewirumudi katty movie reviewtamil and telugu movie irumudi kattu reveiwஇருமுடி கட்டு திரைப்பட விமர்சனம்இருமுடி கட்டு விமர்சனம்தமிழ் மற்றும் தெலுங்குப் படம் சிங் கீதம் விமர்சனம்ரவி தேஜாவின் இருமுடி கட்டு விமர்சனம்
Comments (0)
Add Comment