’போட்டோகிராபர்’ திரைப்பட விமர்சனம்

புகைப்பட கலைஞரான நாயகன் அஷ்ரப், இதுவரை யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு அரிய மரத்தை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் பயணிக்கிறார். அப்போது வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார். சென்றவர்கள் யாரும் திரும்பி வராத மிக ஆபத்தான அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறும் அஷ்ரப், பல ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு உயிருக்கு போராடுகிறார்.

காட்டில் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல மர்மம் மற்றும் திகில் சூழல்களை எதிர்கொள்ளும் அஷ்ரப், அங்கிருத்து தப்பித்தாரா ?, அவர் புகைப்படம் எடுக்க நினைத்த மரத்தை பார்த்தாரா ? என்பதை திகில் மற்றும் உளவியல் கலந்து சொல்வதே ‘போட்டோகிராபர்’.

கதை எழுதி இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், தனிமனித பயணத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு மர்மம், திகில், அமானுஷ்யம், உளவியல் ஆகிய உணர்வுகளின் பயணமாக படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

வீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக முழு படத்தையும் சுமந்திருக்கும் அஷ்ரப், முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரமும், அவரது நடிப்பும் ஓவர் டோஸ் போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் பயணிக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் அவரது நடிப்பு பாராட்டை பெறுகிறது.

நாயகியாக நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அனனி சுவாமிநாதன் நிறைவாக நடித்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் உறியடி சிவாவின் நடிப்பும் நன்று.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேனின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், அழகு மற்றும் அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத், காட்டின் அமைதியையும், ஆபத்தையும் பார்வையாளர்கள் அச்சமடையும் வகையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால், வனப்பகுதியின் பெரும்பாலான காட்சிகள் பகல் நேரத்தில் நடப்பதாலும், அடர்ந்த வனப்பகுதி அல்லாத இடங்களில் காட்சிகள் பயணிப்பதாலும் நம்மால் அச்சமடைய முடியவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் மேற்கொண்ட மிரட்டல் முயற்சிகளும் பெரும் தோல்வியடைந்திருக்கிறது.

ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை மற்றும் வித்தியாசமான ஒலிகள் கவனம் ஈர்க்கிறது. நாயகன் கதாபாத்திரம் மட்டுமே பயணிக்கும் இரண்டாம் பாதியில், பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதத்தில் பயணித்திருக்கிறது.

ஆபத்து நிறைந்த ஒரு பயண கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் துணையாக பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரணவ், முதல் பாதி முழுவதையும் மிக மெதுவாக நகர்த்தியிருப்பது பார்வையாளர்களை சோர்வடைய வைக்கிறது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதையை வேகமாக விவரித்திருப்பதோடு, சில எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் படத்துடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்து விடுகிறார்.

இயக்குநர் அஷ்ரப், ஒரு புகைப்பட கலைஞரின் பயணத்தை கருவாக வைத்துக்கொண்டு, எழுதியிருக்கும் திரைக்கதை உயிர் பிழைக்கும் தனிமனித போராட்டத்தையும், சாகசத்தையும் காட்சி மொழியில் விவரிக்க முயற்சித்திருக்கிறது.

துவக்கம் முதலே மெதுவாக நகரும் படம், கதைக்குள் பயணிக்க தடுமாறுவதும், நேரத்தை கடத்துவதற்காக கையாளப்பட்ட காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பதால் முதல் பாதி படம் பார்வையாளர்களை சோர்வடைய வைத்து விடுகிறது. இரண்டாம் பாதியில் கதை தொடங்குவதும், இயற்கை, அம்மா – மகன் செண்டிமெண்ட், அதன் மூலம் ஏற்படும் உளவியல் பாதிப்பு ஆகியவற்றின் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டு படம் கவனம் ஈர்க்கிறது.

இருந்தாலும், நாயகனின் காட்டு பயணத்தையும், அதில் அவர் எதிர்கொள்ளும் மர்மங்களையும் பார்ப்பதற்கு அதிகம் பொறுமை தேவை.

மொத்தத்தில், ‘போட்டோகிராபர்’ அவுட் ஆஃப் போக்கஸ்.

ரேட்டிங் 2.8/5

photographer movie reviewphotographer reviewtamil movie photographer reviewதமிழ்ப் படம் போட்டோகிராபர் விமர்சனம்போட்டோகிராபர் திரைப்பட விமர்சனம்போட்டோகிராபர் விமர்சனம்
Comments (0)
Add Comment