வில்லனாக நடிக்கவும் தயார்! – ‘நிறம்’ விழாவில் நாயகன் முகேன் அறிவிப்பு

கே ஸ்கொயர் சினிமாஸ் (K Square Cinemas) நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம். இதில், நாயகனாக ‘பிக் பாஸ்’ பிரபலம் முகேன் நடிக்க, நாயகிகளாக தன்யா ஹோப் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார்கள். நிதின் சத்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். பா.விஜய் மற்றும் விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். வி. ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கத்தை தாமோதரன் மேற்கொண்டுள்ளார். கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘நிறம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

படம் குறித்து நாயகன் முகேன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ’நிறம்’ ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர். இந்த படத்தில் நடிக்க என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார். படப்பிடிப்பின் போது எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து, கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இமான் சார் இசையில் நடிப்பது எனக்கு ஒரு கனவு நிறைவேறியது. நிதின் சத்யாவுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். தயாரிப்பாளர், தொழில்நுட்பக் குழுவினர், பாடகர்கள், பாடலாசிரியர்கள் என அனைவரும் இந்த படத்திற்காக மனதார உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

மேலும், ஹீரோவாக மட்டுமே நடிப்பீர்களா, வில்லன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த முகேன், “தற்போதைய காலக்கட்டத்தில் கதை தான் ஹீரோ, அதனால் நல்ல கதையில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதை ஹீரோவாக தான் மக்கள் பார்ப்பார்கள். நானும் அப்படி தான் அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன், வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.” என்றார்.

பாடகி ஸ்ரீநிஷா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இமான் சார் இசையில் ஏற்கனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும், “நூதனா” பாடல் எனக்கு மிகவும் பிடித்த மெலடி. இந்தப் பாடலை கபிலனுடன் இணைந்து பாடியது ஒரு அருமையான அனுபவம். இமான் சார் மிகவும் வேகமாகவும், பாடகர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பதிவு நடத்துவார். இயக்குநர் பலராம் கிருஷ்ணா மிகவும் அன்பாகவும், குடும்ப உறுப்பினர் போலவும் எங்களை கவனித்துக் கொண்டார். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

நடன அமைப்பாளர் சாய் பாரதி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ’நிறம்’ திரைப்படத்தில் “நூதனா” பாடலுக்கு நடன அமைக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பலராம் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மற்றும் இமான் சாருக்கு என் நன்றிகள். முகன் மற்றும் ப்ரீத்தி இருவரும் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்கள். குறிப்பாக கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக உருவாக்கியதால், பாடல் இன்னும் சிறப்பாக வந்துள்ளது. முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.

நடிகை தான்யா ஹோப் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த அழகான வாய்ப்பை அளித்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கும், என்னை இந்த படத்தில் இணைத்த நிதின் சத்யாவுக்கும் என் மனமார்ந்த நன்றி. சங்கர் மாஸ்டரின் நடன அமைப்பு இந்த பாடலை இன்னும் அழகாக்கியுள்ளது. முழு படக்குழுவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.” என்றார்.

பாடகி பிரவஸ்தி பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். நான் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரவஸ்தி. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படப் பாடல் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அருமையான வாய்ப்பை அளித்த இசையமைப்பாளர் டி. இமான் சார் மற்றும் இயக்குநர் பலராம் கிருஷ்ணா சாருக்கு என் மனமார்ந்த நன்றி. சிறு வயதில் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியிருந்தாலும், ஒரு தமிழ் திரைப்படத்தில் பாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவை நிறைவேற்றிய அனைவருக்கும் என் நன்றிகள். “நிறம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகை ப்ரீந்து மாதவி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இன்று முழு “நிறம்” படக்குழுவுடன் இந்த மேடையில் இருப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்துள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படத்தை பார்வையாளர்கள் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அனைவரும் திரையரங்கில் சென்று “நிறம்” திரைப்படத்தை பார்த்து ரசித்து, உங்கள் ஆதரவை வழங்குங்கள். நன்றி.” என்றார்.

நடிகர் நிதின் சத்யா பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படம் ஒரு நட்பின் அடிப்படையில் உருவானது. இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுடன் எனக்கு பல வருடங்களாக நட்பு உள்ளது. அதனால் இந்த படத்தில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பல விஷயங்களில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன். படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இமான் சார் இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் இசையமைத்துள்ளார். இயக்குநரின் அர்ப்பணிப்பும், தயாரிப்பாளரின் நம்பிக்கையும் இந்த படத்தின் பலம். முதல் படம் என்ற எண்ணமே வராத அளவுக்கு பலராம் கிருஷ்ணா சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்த நல்ல படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடக நண்பர்களின் கையில்தான் இருக்கிறது. அனைவரும் படம் பார்த்து மனதார ஆதரித்து, நேர்மையான கருத்துக்களை பகிர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், “’நிறம்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தின் கதையை கேட்டவுடனேயே இதில் ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் இருப்பதை உணர்ந்தேன். இயக்குநர் பலராம் கிருஷ்ணா தனது முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல தெளிவான பார்வையுடன் பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து கலைஞர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாடலாசிரியர்கள் விவேகா, பா. விஜய், எடிட்டர் சாபு ஜோசப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரின் பங்களிப்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து, இந்த படக்குழுவின் உழைப்பை பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நிறைவேறிய தருணம். பல வருடங்களாக நான் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். என்னை நம்பிய குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. “நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து. இது ஒரு கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இமான் சார், முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் இந்த படம் உருவாகியுள்ளது. நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்.” என்றார்.

d immanmugenniramniram audio launchtamil movie niramtanya hopeடி இமான்தன்யா ஹோப்தமிழ்ப் படம் நிறம்நிறம்நிறம் இசை வெளியீட்டு விழாமுகேன்
Comments (0)
Add Comment