‘சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்

மோசடி குற்றத்திற்காக போபால் சிறையில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் நாயகன் அயானுக்கு அவரது குடும்ப சொத்தின் பத்திரம் கிடைக்கிறது. அதில் அவரது குடும்பத்துக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வருகிறது. அந்த நிலத்தை தேடி குபேரபுரம் என்ற ஊருக்கு செல்கிறார். பாலைவனம் போல் காட்சியளிக்கும் அந்த ஊர் மக்கள், தோண்டப்பட்டு இருக்கும் இரண்டு தங்க சுரங்கங்களை நம்பி வாழ்கிறார்கள். அந்த ஊருக்கு அயான் சென்றதும், அந்த தங்க சுரங்கத்தின் மற்றொரு உரிமையாளர் தனது தந்தை தான் என்பதை தெரிந்துக் கொள்கிறார்.

எனவே, கிடைத்த வரை லாபம் என்று நினைத்து, தனது நிலத்திற்கான பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து ஓடிவிட திட்டம் போடுகிறார். ஆனால், அவரது திட்டம் நிறைவேறாதபடியும், அவரால் அங்கிருந்து வெளியேறாதபடியும் அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதன் மூலம் அந்த ஊரில் உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட பாடலாக பாடும் விநோதமான பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

மக்கள் மட்டும் அல்ல, அந்த ஊரில் இருக்கும் கோழி கூட அதிகாலை கூவலை சங்கீத பாணியில் வெளிப்படுத்துகிறது. மக்களும் தங்களது சாதாரண வார்த்தைகளை கூட பாடலாக பாடுவதை, குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று கருத, அந்த சாபத்தில் இருந்து விடுபட்டார்களா?, பணத்தோடு ஓடிவிட நினைத்த நாயகன் அயானின் திட்டம் நிறைவேறியதா ? என்பதை வித்தியாசமான முயற்சியோடு சொல்வதே ‘சிங் கீதம்’.

’பேசும் படம்’ மூலம் உரையாடல்களே இல்லாத ஒரு படத்தை இயக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், உரையாடல்கள் அனைத்தும் பாடல்களாக ஒலித்தால் எப்படி இருக்கும்? என்ற மற்றொரு புதிய மற்றும் வித்தியாசமான கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி என்றாலும், அதை சரியான முறையில் திரையில் கொண்டு வருவதற்கு எத்தகைய கடுமையான பணிகளை கடந்திருப்பார்கள், என்பதை ஒவ்வொரு பிரேமிலும் பார்க்க முடிகிறது. வித்தியாசமான ஃபேண்டஸி பாணியில் திரைக்கதையை கையாண்டிருந்தாலும், மனிதர்கள் தங்களது பேராசை மூலம் இயற்கை அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அதே இயற்கையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், என்ற மெசஜை திரை மொழியில் அழகியலோடு சொல்லி பார்வையாளர்களை யோசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அயான், கலகலப்பான கதாபாத்திரத்தில் ஜாலியாக வலம் வந்தாலும், அம்மா செண்டிமெண்ட் மற்றும் தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மரங்களையும், இயற்கையையும் காப்பதற்கு போராடும் கெளரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ துறுதுறு நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார்.

தங்க சுரங்கத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, தனது அளவான நடிப்பு மற்றும் அழகான எக்ஸ்பிரஷன் மூலம் கவர்கிறார்.

சைலஜம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டா என அனைவரும் தங்களது திரை இருப்பு மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி உண்மை எது, செயற்கை எது என்று கண்டறிய முடியாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். அதிலும், வறண்ட நிலப்பரப்பில் பயணிக்கும் கதையையும், அந்த மண்ணின் மைந்தர்களையும் காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

பாடல் வரிகளுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் மத்தியில் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை பாடல்களாக ஒலிக்கச் செய்திருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது சிறப்பான பணி மூலம் ஒட்டுமொத்த படத்தையும் கொண்டாட வைத்திருக்கிறார். பேசும் வார்த்தைகளுடன், தனிப்பாடல்களையும் சிறப்பான முறையில் கொடுத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணி இசை மூலமாகவும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

கலை இயக்குநர் அரவிந்த் மூலேவின் கைவண்ணங்கள் ஒரு ஊரையே உருவாக்கியிருந்தாலும், அதை உண்மைக்கு நெருக்கமாக உருவாக்கி அசத்தியிருக்கிறார். மிகப்பெரிய பரப்பளவு கொண்ட வறண்ட நிலம், அதில் இருக்கும் ஒற்றை ஆலமரன், மக்கள் வசிக்கும் இருப்பிடம், அதில் இருக்கும் பல்வேறு வகையிலான வீடுகள், பழைய தங்க சுரங்கங்கள், குபேர கோவில் மற்றும் கீரிப்பிள்ளை சிலை என்று கலை இயக்குநர் அரவிந்த மூலே, வடிவமைத்திருக்கும் அரங்குகள் அனைத்தும் செயற்கை என்று தெரியாதவாறு அமைக்கப்பட்டிருப்பது படத்தின் கூடுதல் பலமாகும்.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், கவுதமி சல்லகுல்லா, ஷஷாங்க் சிந்தலபூடி, ரத்னா ஸ்ரீகர், நந்தகிஷோர் ஈமானி, ராகுல் வி ராஜேஷ்வர் ஆகியோரது எழுத்தில் ஃபேண்டஸியும், பக்தியும் நிரம்பியிருந்தாலும், சமூக பொறுப்பு அதை விடவும் அதிகமாக இருக்கிறது. மனிதர்களின் பேராசையும், அழிக்கப்படும் இயற்கை வளங்கள் குறித்தும் பேசியிருக்கும் கதையாசிரியர்கள் அதை பிரச்சார பாணியில் சொல்லாமல் திரை மொழியில் சொல்லியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு ஆகும்.

50 வருடங்களை கடந்த தனது சினிமா பயணத்தை வித்தியாசமான பரிசோதனை முயற்சியின் மூலம் வியக்க வைக்கும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தனது புதுமையான யோசனைகள் மூலம் பார்வையாளர்களுக்கு புதுமையான திரை அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

அரை மணி நேரத்திற்கு ஒரு பாடல் என்றாலே பாதி பேர் எழுந்து செல்லும் நிலையில், உரையாடல்களை பாடல்களாக்கி, படத்தில் இடம்பெறுபவர்கள் அனைவரையும் பாட வைத்து நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், அதை எந்தவிதத்திலும் போராடிக்காமல் கையாண்டிருப்பதோடு, பார்வையாளர்கள் அதை அணுஅணுவாக ரசிக்கும்படியான காட்சிகளாகவும் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

வித்தியாசமான முயற்சி என்றாலும், அதை அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், டப்பிங் கலைஞர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பின் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது, என்பதையும் பார்வையாளர்கள் புரிந்துக் கொள்ளும்படி சொல்லியிருக்கும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், வயதில் 80 தாண்டினாலும், தனது சிந்தனையில் இன்னும் இளைஞராகவே இருக்கிறார், என்பதை நிரூபித்து விட்டார்.

மொத்தத்தில், ‘சிங் கீதம்’ வியக்க வைக்கும் வித்தியாசம்.

ரேட்டிங் 4 /5

sing geetham movie reviewsing geetham reviewtamil movie sing geetham reviewசிங் கீதம் திரைப்பட விமர்சனம்சிங் கீதம் விமர்சனம்தமிழ் மற்றும் தெலுங்குப் படம் சிங் கீதம் விமர்சனம்
Comments (0)
Add Comment