ராமேஸ்வரம் தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது, மக்கள் தண்ணீரில் போடும் காசுகளை கடலுக்குள் மூழ்கி எடுக்கும் பணியை செய்து வரும் கருணாஸுக்கு, அந்த கடலில் ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்ய, அதுவே அவரை பெரும் சிக்கலில் சிக்க வைக்கிறது.
அந்த பதக்கத்தை அபகரிக்க நினைக்கும் சில காவலர்கள் அது முடியாமல் போனதால், தப்பித்துக் கொள்வதற்காக கோவில் நகை கொள்ளை வழக்கில் கருணாஸை சிக்க வைத்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அது கோவில் நகை அல்ல, என்பது தெரிந்ததும் அவரை வேறு ஒரு திருட்டு வழக்கில் சிக்க வைத்து விடுகிறார்கள்.
சிறையில் இருக்கும் கருணாஸை காப்பாற்ற வழக்கறிஞர் நிமிஷா சஜயன், சட்டம் போராட்டம் நடத்துகிறார். அவரது வாதத்திறமையால் கருணாஸை நிரபராதி என்று நிரூபிக்கும் நிமிஷா சஜயன், எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்ட சாமானியன் கருணாஸ் குரலாக நீதிமன்றத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். இதுவரை நீதித்துறையிடம் யாரும் முன்வைக்காத அந்த கேள்வியால் நீதிபதி அதிர்ச்சியடைய, பாதிக்கப்பட்டவருக்காக பணத்தை தாண்டிய இழப்பீடு ஒன்றையும் நிமிஷா கேட்கிறார்.
வழக்கறிஞர் நிமிஷா சஜயன் கேட்கும் அந்த இழப்பீடு அரசுக்கு எதிரானதாகவும், அரசு வழங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றாலும், அந்த கேள்வி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் அரசிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்கள். சாமானியன் கருணாஸ் கேட்ட அந்த கேள்வி என்ன ?, பாதிக்கப்பட்ட அவருக்காக வழக்கறிஞர் நிமிஷா கேட்ட இழப்பீடு என்ன ?, என்பதை அரசு எந்திரத்தை ஆட்டம் காணும் செய்யும் விதத்தில் சொல்வது தான் ‘என்ன விலை’.
எந்த தவறும் செய்யாமல் சட்டத்தின் மூலம் சாமானியர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும், சிலர் அதே சட்டத்தின் மூலம் போராடி தங்களை நிரபராதி என்று நிரூபிப்பதும் புதிதல்ல என்றாலும், பாதிக்கப்பட்ட சாமானியன் மிது விழுந்த அந்த வீண் பழியை போக்குவது அரசின் கடமை, என்று வாதிடும் இயக்குநர் சஜீவ் பழவூர், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை வீரியம் நிறைந்ததாக சொல்லி புதிய சட்டப்புரட்ச்சியை நிகழ்த்தியிருக்கிறார்.
கதையின் நாயகனாக தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், தனது திரை இருப்பு மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒரு சாதாரண மனிதர் மீது விழும் வீண் பழி அவரை எந்த அளவுக்கு பாதிக்கிறது, என்பதை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் கருணாஸ், தனது அளவான நடிப்பு மற்றும் அழும் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன், சொந்தமாக டப்பிங் பேசி நடித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில், உணர்வுப்பூர்வமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் நிமிஷா சஜயன், தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றக் காட்சிகளுக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்.
கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலக்ஷ்மி வீரமணி, தங்கையாக நடித்திருக்கும் சாஷா ஆகியோர் இயல்பான முகம் மற்றும் நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், நீதிபதிகளாக நடித்திருக்கும் நிழல்கல் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், டி.எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், காவலர்களாக நடித்திருக்கும் மோகன் ராம், தர்ஷன் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகளில் முகம் காட்டினாலும், திரைக்கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக பயணித்து பார்வையாளர்கள் மனதில் தங்கி விடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி, இயற்கையான ஒளிகளை மட்டுமே பயன்படுத்தி கதைக்களத்தின் இயல்பு தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். கதை மாந்தர் யார் ?, அவர் செய்யும் தொழிலில் இருக்கும் ஆபத்து என்ன ? போன்றவற்றை விளக்கிய காட்சிகள் கோப்புக் காட்சிகள் என்றாலும் அதை கையாண்ட விதம் மற்றும் நீதிமன்ற காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி புதிய வடிவிலான ஒரு பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
பதக்கம் மூலம் நாயகனுக்கு ஏற்படும் சிக்கல், வெவ்வேறு பாதையில் பயணிப்பதையும், அதன் மூலம் நிகழும் நீதிமன்ற வாதங்களையும் மிக நேர்த்தியாக தொகுத்து படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்.
பாதிக்கப்பட்டவருக்கு சட்டப் போராட்டத்தினால் சரியான நீதி கிடைத்தாலும், அவர் மீது சுமத்தப்பட்ட பழி மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்காக இயக்குநர் சஜீவ் பழவூர், சட்டத்துறையிடம் முன் வைத்திருக்கும் கேள்வி இதுவரை எந்த திரைப்படத்திலும் கேட்டிராத ஒன்று. அதே சமயம், பாதிக்கப்பட்டவருக்காக அவர் கேட்கும் இழப்பீடும் இதுவரை யாரும் கேட்டிராத ஒன்றாகவும், வழங்குவதற்கான சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், இத்தகைய கேள்வி மற்றும் இழப்பீடு மூலம் மக்களை மட்டும் இன்றி அரசுத் துறைகளை யோசிக்க வைத்திருக்கிறார்.
தற்போதைய காலக்கட்டத்தில் மீனவ கிராமங்கள் உள்ளிட்ட எங்கும் குடிசை வீடுகளே இல்லாத ஒரு சூழலில், ஓலை தட்டிகள் கொண்ட கருணாஸின் வீடு மிகவும் செயற்கைத்தனமாக இருக்கிறது.
சட்டப்போராட்டம் மற்றும் நீதிமன்ற வாதங்கள் படத்தின் பெரும்பாலான காட்சிகளாக இருந்தாலும் அதை திரைக்கதையில் மிக சுவாரஸ்யமாக கையாண்டிருக்கும் இயக்குநர் சஜீவ் பழவூர், பதக்கம் ஒன்றை மையக்கருவாக வைத்துக்கொண்டு சமூக பிரச்சனை பற்றி பேசியிருப்பதோடு, அதை தொய்வில்லாத திரைக்கதை மூலம் விறுவிறுப்பான திரைப்படமாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘என்ன விலை’ படம் பார்க்கும் பார்வையாளர்களின் பணம் வீண் விரயம் ஆகாது.
ரேட்டிங் 4 / 5