தனது பெற்றோர் போல் காதல் திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் கவினுக்கு காதல் கை கூடாததால், அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். காதலித்து தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், கடிதம் மூலம் குடும்பத்தாரை மிரட்டிவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.
அம்மா முகத்தை பார்க்காத, அப்பாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் நாயகி நயன்தாரா, திருமண பந்தத்தில் சிக்கி விடாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அவருக்கு திடீரென்று திருமண ஏற்பாடு நடக்க, அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.
வீட்டை விட்டு ஓடி வந்த நயன்தாராவும், கவினும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாக பழகுகிறார்கள். கவின், தான் எதிர்பார்க்கும் காதலி நயன்தாரா தான் என்று நினைத்து அவரை காதலிக்க தொடங்குகிறார். ஆனால், நயன்தாரா காதல், கல்யாணம் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்த, கவின் தன் காதலை சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
இதற்கிடையே, கவினும், நயன்தாராவும் கணவன் – மனைவியாக சில மாதங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, நயன்தாராவை தன் காதல் வலையில் வீழ்த்த முடிவு செய்யும் கவின், அதில் வெற்றி பெற்றாரா? என்பதை திகிட்டாத காதல் உணர்வோடு சொல்வதே ‘ஹை’.
கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக நடித்திருக்கும் கவின், காதல் மீதான தன் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் தன் நடிப்பில் மிக சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். நயன்தாரா உடனான தனது வயது வித்தியாசத்தை தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் மறைத்திருக்கும் கவின், பல காட்சிகளை மிக இயல்பாக கையாண்டு ரசிக்க வைத்திருப்பதோடு, காமெடி கலந்த நடிப்பின் மூலம் அவ்வபோது சிரிக்க வைக்கவும் செய்கிறார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெண் என்றாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பையும், வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் நயன்தாரா, கூடுதல் பளிச்சென்று இருக்கிறார். கிராமத்து பெண் என்றாலும், மாடர்ன் உடை மூலம் அந்த அடையாளமே தெரியாத வகையில் பயணிக்கும் அவரது திரை இருப்பு மற்றும் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும், அவரது வயது முதிர்ச்சி சில காட்சிகளுடன் ஒட்டாமல் தணித்து பயணிக்கிறது.
கவினின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, அப்பாவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரது காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக சத்யனின் சாதாரண மைண்ட் வாய்ஸ் கூட திரையரங்கமே அதிரும்படியாக சிரிக்க வைக்கிறது.
விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரின் திரை இருப்பு சிறியது என்றாலும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, நயன்தாராவை பளிச்சென்று காட்டியிருக்கிறார்.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாட்ட ரகமாகவும், பின்னணி இசை காதல் உணர்வுகளை கடத்தும் விதமாகவும் பயணித்திருக்கிறது.
இலகுவான கதையை, பார்வையாளர்கள் உள்ளத்தை தொடும் இதமான உணர்வுகள் போல் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.
எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், எளிமையான காதல் கதையை, எளிமையான திரைக்கதையோடு சொன்னாலும், அமைதியான மற்றும் இதமான உணர்வை கொடுக்கும் படமாக கொடுத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, எந்தவிதமான திருப்பங்களோ, எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பயணித்தாலும், கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் வடிவமைப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கும் வித்தையை இயக்குநர் விஷ்ணு எடவன் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
கண்கள் கூசும் அளவுக்கு நயன்தாரா பிரகாசமாக இருந்தாலும், அவரது வயது முதிர்வு திரையில் தெரிவதும், கவின் உடனான காட்சிகளில் அது ஒட்டாமல் பயணிப்பதும் படத்தின் குறையாக இருந்தாலும், கவினின் முதிர்ச்சியான, அளவான மற்றும் இயல்பான நடிப்பு அந்த குறையை மறக்கடித்து, படம் பார்வையாளர்ளை கவரும்படி செய்து விடுகிறது.
மொத்தத்தில், ‘ஹை’ அனைவரையும் ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3.5/5