தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.எஸ், தங்கப்பாண்டி.டி ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்பட்த்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட முதல் பார்வை போஸ்டர் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடுமையாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறார். ஆனால் அந்த வாகனம் திருடப்பட்ட பிறகு, அதற்கு பலர் உரிமை கோரும் சூழ்நிலை உருவாகிறது. வாகனத் திருட்டு மாஃபியாவை மையமாகக் கொண்டு, நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.
’மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
யோகி பாபு, இதுவரை நடித்திராத வகையில், யதார்த்தம் கலந்த உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார். மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், மதன் தட்சணாமூர்த்தி (அயலி), சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, M.சௌந்தர்யா சரவணன், சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் லெனின் பாரதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை மு.காசிவிஸ்வநாதன், கலை இயக்கத்தை பி. சேகர் மற்றும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷ் ஆகியோர் கவனித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 17 ஆம் தேதி ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.