இந்திய புராண உலகத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு புதுமையாக அறிமுகப்படுத்தும் அனிமேஷன் தொடர்!
குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5, தனது குழந்தைகளுக்கான உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான ’சிவலோஒக் கி குண்டக்க மண்டக்க’ (Shivlok Ke Kundakka Mandakka – SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய அதிகம் விற்பனையான குழந்தைகள் நூலான The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், அனைவராலும் விரும்பப்படும் புராண உலகத்தை அனிமேஷன் வடிவில் திரையில் உயிர்ப்பிக்கிறது.
ஜூலை 17 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்தக் கதையின் மையமாக, குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா இடம்பெறுகின்றனர். அவர்களின் விளையாட்டுத்தனமான குறும்புகள், தைரியம், நட்பு மற்றும் சுயஅறிதல் நிறைந்த அசாதாரணமான சாகசப் பயணத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றன.
ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான கதைகளைத் தாண்டி விரியும் புராண உலகில் அமைந்துள்ள இந்தத் தொடர், இந்தியாவின் செழுமையான புராண பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட புதிய கதாபாத்திரங்கள், இதுவரை ஆராயப்படாத உலகங்கள் மற்றும் மாயாஜால சாகசங்களை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
நகைச்சுவை, அதிரடி மற்றும் வண்ணமயமான அனிமேஷன் ஆகியவற்றின் கலவையுடன், இன்றைய இளம் தலைமுறைக்காக புராணங்களை புதிய கோணத்தில் மறுவடிவமைக்கும் இந்தத் தொடர், முழுமை (Perfection) அல்ல, ஒருவர் எடுக்கும் முடிவுகளே அவரை ஹீரோவாக உருவாக்குகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது.
விரிவடையவிருக்கும் மிகப்பெரிய புராண பிரபஞ்சத்தின் முதல் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ள Shivlok Ke Kundakka Mandakka, புதிய கதாபாத்திரங்கள், புதிய சாகசங்கள் மற்றும் புதிய கதைகள் மூலம் தொடர்ந்து வளரக்கூடிய உலகத்திற்கு அடித்தளமிடுகிறது. இதன் மூலம், இந்திய புராணங்களை விளையாட்டுத்தனமான, எதிர்பாராத மற்றும் புத்துணர்ச்சியூட்டும் புதிய பார்வையில் இளம் பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும்.
கதையின் மையமாக இரண்டு குறும்புத்தனமான அசுர கதாபாத்திரங்களை வைத்து, விளையாட்டுத்தனமான குழந்தைகளுக்கு மதிப்புகளோ ஒழுக்கமோ இல்லை என்ற பொதுவான கருத்தை இந்தத் தொடர் சவாலுக்கு உட்படுத்துகிறது. குண்டக்கா மற்றும் மண்டக்காவின் சாகசங்கள் மூலம், ஆர்வமும் குறும்புத்தனமும் கருணை, தைரியம் மற்றும் பரிவு போன்ற உயரிய பண்புகளுடன் இணைந்து இருக்க முடியும் என்பதை பார்வையாளர்கள் உணர்கிறார்கள்.
KidZ மூலம், இந்திய கலாச்சாரத்தையும் சமகாலக் கதையம்சங்களையும் அடிப்படையாகக் கொண்ட, பாதுகாப்பான மற்றும் வயதுக்கேற்ற பொழுதுபோக்கை வழங்கும் நம்பகமான தளத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக ZEE5 உருவாக்கி வருகிறது.
குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாகக் கண்டு ரசிக்கும் குடும்பப் பார்வை அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பொழுதுபோக்குடன் காலத்தால் அழியாத வாழ்க்கை மதிப்புகளையும் கொண்டாடுகிறது.
Shivlok Ke Kundakka Mandakka தொடர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகிறது.
இந்த அறிமுகம் குறித்து KidZ, ZEE5-ன் Business Head சந்தன் கந்தேல்வால் கூறியதாவது:
“ZEE5-இல், தலைமுறைகள் கடந்து மக்களால் நேசிக்கப்பட்ட கதைகளே நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், ஆனந்த் நீலகண்டன் போன்ற புகழ்பெற்ற கதைசொல்லிகளுடன் இணைந்து, அந்த உலகங்களை இன்றைய இளம் பார்வையாளர்களுக்காக உயிர்ப்பிக்கிறோம்.
Shivlok Ke Kundakka Mandakka மூலம், அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த புராணங்களைத் தாண்டி, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், நகைச்சுவை, சாகசம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகள் நிறைந்த புதிய உலகத்தை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.
இந்திய புராணங்களின் செழுமையையும், ஈர்க்கக்கூடிய கதையம்சங்களையும், உயர்தர அனிமேஷனையும் இணைத்து, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சமமாக மகிழ்ச்சியளிக்கும், அர்த்தமுள்ள குடும்பப் பார்வை அனுபவத்தை உருவாக்கியுள்ளோம்.
KidZ தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் கதை சொல்லும் பாரம்பரியத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் புதிய வடிவில் வழங்கும் படைப்பாளிகளுடன் இணைந்து, இந்தியாவில் உருவாகும் புதிய பிராண்டு கதைகளை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும்.”
இந்தத் தழுவல் குறித்து எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் கூறியதாவது:
“என்னுடைய The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids என்ற நூலை KidZ, Shivlok Ke Kundakka Mandakka என்ற அனிமேஷன் தொடராக உயிர்ப்பித்து, புதிய தலைமுறை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தியாவின் செழுமையான புராண பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் இவ்வளவு பெரிய தளங்கள் முதலீடு செய்து, குழந்தைகளுக்காக அவற்றை இவ்வளவு சுவாரஸ்யமான முறையில் மறுவடிவமைப்பதைப் பார்ப்பது உற்சாகமளிக்கிறது.
நான் குண்டக்கா மற்றும் மண்டக்காவை உருவாக்கியபோது அனுபவித்த மகிழ்ச்சியைப் போலவே, இளம் பார்வையாளர்களும் அவர்களின் திரை சாகசங்களை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த குறும்புக்கார கதாபாத்திரங்களும் அவர்களின் உலகமும் அனிமேஷன் மூலம் புதிய உயிர் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.”