29 வயதாகியும் தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் நாயகன் விது, நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதலால், அழகான பெண்ணின் காதலன் என்ற அடையாளத்தை பெறுகிறார். தனக்கு கிடைத்த காதலன் அடையாளமும், பீரித்தியின் காதலும் போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் விதுவுக்கு, காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதை தாண்டிய ஒரு வாழ்க்கையும், அதில் சாதிக்க வேண்டியதும் அவசியம், என்பதை புரிய வைக்க பிரீத்தி அஸ்ரானி முயற்சிக்கிறார். ஆனால், அது முடியாமல் போக அவர் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.
தனக்கான அடையாளமாக நினைத்த காதலும், காதலியும் கைவிட்டு போன பிறகு, மீண்டும் தன் அடையாளத்தை தேடி பயணிக்கும் விதுவின் வாழ்க்கை என்ன ஆனது ?, கைவிட்டு சென்ற காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? இல்லையா ?, என்பதை கொண்டாடும் காதலோடும், காதலை கடந்த எதார்த்த வாழ்க்கையோடும் சேர்த்து சொல்வது தான் ‘29’.
என்ன தான் உருகி உருகி பல வருடங்கள் காதலித்தாலும், காதல் பயணத்தின் முடிவு என்பது சில நிமிட காமம் மட்டுமே, என்பதை கவித்துவத்தோடும், நாகரீகமான முறையிலும் சொல்லியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், பெண்ணை நிலா, மலர், நட்சத்திரம் என்று வர்ணித்தாலும் கடைசியில் அவர் ஒரு பெண் மட்டுமே, ஆணை சிங்கம், காளை என்று வர்ணித்தாலும் அவர் ஒரு ஆண் மட்டுமே, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், எதார்த்தமான வாழ்க்கையை விட பெரியது அல்ல, அதையும் தாண்டி இங்கு சாதிக்க நிறைய இருக்கிறது, என்பதை சொன்ன விதமும், அதற்கான காட்சிகளை கையாண்ட முறையும், காதலர்களை மட்டும் அல்ல காதலிக்காதவர்களையும் கைதட்ட வைக்கும்.
’ரெட்ரோ’ படத்தில் வில்லனாக மிரட்டிய விது, இதில் நாயகனாகவும், காதலனாகவும் கவர்கிறார். காதல் மட்டுமே தன் அடையாளம் என்பதையும், காதலிக்கு தன் நினைவை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளிலும் நிச்சயம் இளம் பெண்களின் கவனம் ஈர்ப்பார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிமையான தோற்றம், காதல் உணர்வுகளையும், காதலி பிரிவால் ஏற்பட்ட மன வலியையும் தன் அளவான நடிப்பின் மூலம் எதார்த்தமாக வெளிப்படுத்தி நடிப்பில் முத்திரை பதித்திருக்கும் விது, கோலிவுட்டில் நிச்சயம் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார், என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
நாயகி பிரீத்தி அஸ்ரானி, அந்நிய மாநிலத்து அழகி என்பது முகத்தில் தெரிந்தாலும், தன் நடிப்பின் மூலம் அதை மறைத்து பார்வையாளர்கள் மனதில் விஜியாக ஒட்டிக்கொள்கிறார். காதலன் கண்ணத்தில் அரைந்து தன் காதலை வெளிப்படுத்துவதும், ஊருக்கு செல்லும் காதலனை வழி அனுப்பும் பதட்டமான மனநிலையை தன் சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தன் காதலின் ஆழத்தை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அவினாஸ், காதல் தோல்வியில் புலம்புவது மட்டும் இன்றி அவ்வபோது இறுக்கமான சூழல்களை விலக்கி, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலக்ஷ்மி, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சிந்து ஷியாம் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மறந்து போன கடற்கரை காதல் மற்றும் பேருந்து காதலை நினைவுப்படுத்துவதோடு, காதலர்கள் கடந்து செல்லும் பாதைகள், பயணித்த இடங்களையும் ரசிக்க வைத்திருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் காதலின் கொண்டாட்டத்தையும், காதலின் வலியையும் பார்வையாளர்கள் மனதில் எளிதில் கடத்தி விடுகிறது. மெதுவாக பயணித்தாலும் காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணிக்கிறது.
காதலும், காதலர்களின் பயணம் மட்டுமே கதை என்றாலும், அதை தொய்வின்றி நகர்த்தி சென்றிருப்பதோடு, திரைக்கதை மற்றும் காட்சிகளில் இருக்கும் காதல் உணர்வுகளை படம் பார்ப்பவர்களிடத்தில் கடத்தும் விதமாகவும் காட்சிகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் ஆர்.எஸ்.சதீஷ் குமார்.
எளிய மக்களின் காதலை எதார்த்தமாக மட்டும் இன்றி இனிமையாகவும், வலிமையாகவும் சொல்லுவதில் ஏற்கனவே தன்னை நிரூபித்த இயக்குநர் ரத்னகுமார், இந்த முறை ஒருபடி மேலே சென்று காதல் கொண்டாட்டத்தோடு, அதை தாண்டிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது, என்ற அறிவுரையை அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்.
காதலுக்கும், கடற்கரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்தது தான், ஆனால் அந்த கடற்கரையில் மறைந்திருக்கும் ஒரு அற்புதமான இடத்தையும், அதில் நாயகன் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியின் மூலம் கடற்கரை காதலுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
என்னதான் உருகி உருகி காதலித்தாலும் கடைசியில் காமத்தில் தானே முடியும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்தாலும், காட்சி மொழியில் அதை மிக நாகரீகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், காதல் பற்றியும், ஆண் – பெண் பாலினம் மற்றும் எதார்த்தமான வாழ்க்கை பற்றி தன் கூர்மையான மற்றும் நேர்மையான வசனங்கள் மூலம் சொல்லி கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில், ‘29’ காதலர்களை மட்டும் அல்ல காதலிக்க மறந்து போனவர்களையும் கொண்டாட வைக்கும்.
ரேட்டிங் 4/5

